1 Aug 2016

மரணத்துடன் ஓர் உரையாடல்

ஆழ்நிலைத் தூக்கத்தில் கண்டக் கனவுதான் என்றாலும் அவ்வபோது சிந்தித்துக் கொள்ளும் சிந்தனைதான் கனவாக வந்திருகிறது என நினைக்கிறன். கடந்த வாரம் எனக்கான பிரத்யேக வலிக்கொல்லி மாத்திரையை உண்டுவிட்டு இருநாள் தொடர்த் தூக்கத்தில் இருந்த போது ஒரு கனவு வருகிறது அதில் ஓர் உரையாடலும் நிகழ்கிறது. என்னுடன் உரையாடுபவன் எனது மரணம்.
ஓர் அழகிய இரவில் பூட்டியிருந்த அறையில் உட்புகுந்த மரணம், எனது கட்டிலின் அருகில் வருகிற போது எனக்கு அவ்வபோது எவ்விடத்தில் கால் இடறுமோ அதேயிடத்தில், அதே பையில் கால் இடற பையிலிருக்கும் கோலிகுண்டுகள் சலசலக்க விழித்துக் கொள்கிறேன் நான்.
"விழித்தவுடன் யார் நீ என்கிற கேள்வியுடன் துவங்குகிறது எங்களுக்கான உரையாடல்."
"சும்மா, உன்னைப் பார்த்துட்டுப் போகலாமுன்னுதான் வந்தேன். உனக்கு நினைவிருகிறதா எத்தனை முறை நாம் நேருக்குநேர்ச் சந்தித்துக் கொண்டோமென்று? அதேபோல நீ என்னை மறைமுகமாகச் சந்தித்தது எப்போதெல்லாம் என்று?"
"ம். பல சந்திப்புகள் நினைவில் இருக்கிறது. அதிலும் கடந்த முறை உன்னுடன் சிறிது தொலைவும், சிலநாட்களும் உன்னுடன் நடைப் பழகினேனே. அதையெல்லாம் மறந்துவிட முடியுமா?"
"நீ, சொல்வதும் சரிதான். உன்னை நெருங்கிய என்னாலையே அவற்றை மறக்கவியலாத போது எப்படி உன்னால் மறந்து விட முடியும்."
"நான்தான் உன் மரணம்"
"சரி, உட்காரு இப்ப என்ன வேண்டும்?"
"சரி, இப்ப வந்த விசையத்தைச் சொல்லிவிட்டுச் சீக்கிரம் செல். தூங்கியாகனும்"
"அதுவொன்றுமில்லை, உன்னிடம் ஒரேயொரு கேள்விக் கேட்க வேண்டுமென்றுதான் வந்தேன். இனிமேல் உன்னைத் தொந்தரவுச் செய்யும் எண்ணமில்லை எனக்கு அதனால் 'உன் மரணம் எப்படி நிகழ வேண்டுமென்று நீயே சொல்லிவிடு அதன் படி உன்னை நெருங்குகிறேன்' என்றைக்காயிருந்தாலும் உன் மரணம் நிகழபோவது ஒன்றுதானே."
"அதுதான் எனக்கும் தெரியுமே என்றாவது ஒருநாள் முழுநேரப் பயணம் உன்னுடன் வந்துவிடுவேனென்று. நான் மட்டுமல்ல அனைவரும் உன்னுடன் பயணம் வந்தாகிதான் வேண்டும்."
"சரி, நீ கேட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன் கேள்."
எனக்கு மூன்று வகைகளில் மரணம் நிகழ வேண்டும்.
1. மக்கள் நடமாட்டமில்லா அடர் வனப்பகுதியில் மெல்லிய சலசலக்கும் இசையோடு நன்னீர் வெள்ளம் அதிகமில்லா காட்டாற்றின் கரையோரப் பாறையொன்றில் உணர்வுகளற்ற நிலையிலிருக்கும் அரையுயிராய் என்னுடல் கிடக்க வேண்டும். அதனை ஏதாவதொரு பறவையோ, மிருகமோ, சிற்றுயிரினமோ தனது பசிப் போக்கிட சாப்பிடத் துவங்கும் போது மங்கிப் போயிருக்கும் பார்வையை அவற்றைப் பார்த்துச் சிரித்தவாறே மரணமடைய வேண்டும்.
2. நல்ல சுவையான பிடித்த உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு இதோ இதுபோன்ற இருள் சூழ்ந்திருக்கும் அறையொன்றில் உறக்கத்திற்காகப் படுக்க வேண்டும். காலை கண்விழிக்கக் கூடாது. உறங்கியபடியே மரணித்திருக்க வேண்டும்.
3. அனைவரிடமும் அன்புச் செலுத்தும் ஒருநபர். மற்றவர்களை விடச் சற்றே அதிகமாக என்னிடம் அன்பும் உரிமையும் கொண்ட அந்த ஒருநபர். பாலின வேறுபாடற்ற அந்த ஒருநபர். இதுவரை நான் கண்டு பிடிக்காத அந்த ஒருநபர். வரும் காலத்தில் என்னுடன் பயணமாகப் போகும் அந்த ஒருநபரின் மடியில் என் தலையிருக்க வேண்டும். அந்தவொரு நிமிடத்தில் தனது ஒட்டுமொத்த அன்பையும் தன்னகத்தே சேகரித்து என் நெற்றியில் சேகரித்த அன்பு மொத்தத்தையும் முத்தமாகச் செலுத்தும் போது நான் மரணிக்க வேண்டும்.
இந்த மூன்று முறைகளில்தான் மரணிக்க வேண்டும் என்பது எனது பேராசையாகக் கூட நீ எண்ணிக் கொள்ளலாம். அல்லது இவற்றில் ஏதோவொன்றை எனக்குப் பரிசளிக்கலாம் அல்லது இவை ஏதுமில்லாமல் உனது விருப்பபடி எப்படி வேண்டுமானாலும் கொடூரமாகக் கூட என் மரணத்தைக் கூடத் தரலாம். எதுவானாலும் உன்னுடன் பயணமாவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
"சரி, நீ கேட்டப்படியான மரணத்தைக் கொடுத்திட முயற்சி செய்கிறேன். தற்போது விடை பெறுகிறேன். படுத்துறங்கு நான் சென்று வருகிறேன் என மரணம் சென்ற போது மீண்டும் கால் இடறி அதே கோலிகுண்டுகளின் சலசலப்புக் கேட்கிறது."
திடீரெனக் கண் விழிக்கிறேன். கட்டிலுக்கு அடியில் புத்தக மூட்டைகளை விளக்கிக் கொண்டு தேடுகிறேன் கோலிகள் சிதறிக் கிடக்கிறதா என்று. சிதறவில்லை கண்டது கனவு என்ற சுயத்திற்கு வருகிறேன். உறகிய நீண்ட நேரத்து உரைக்கும் முடிவிற்கு வந்திருகிறது அப்படியிருந்து ஆங்காங்கே வலிகள் மட்டும் நீடிக்க மீண்டும் இரண்டாம் நாளுக்கான வலிக்கொல்லியுடன் ஆரம்பமாகிறது அடுத்த நாளுக்கான உறக்கம். ஆனால் கனவுதானில்லை.

#இனியன்

8 Jul 2016

ஆமை காட்டிய அற்புத உலகம் ஒரு சாகசக் கனவுலகம்

இரவு நேர உறக்கத்தினிடையே விழித்துக் கொள்வதும், மீண்டும் இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு உறங்கச் செல்வதும் மிகச் சாதாரணமாகத் தினந்தினம் நிகழக் கூடிய அன்றாடச் செயல்பாடாகவே மாறிவிட்ட ஒன்றாகயிருகிறது. விழித்திருக்கும் அவ்விரண்டு மணிநேர விழிப்பில் படிப்பதற்கென்று தலைக்கருகில் புத்தகத்தை வைத்துக் கொள்வதும் முந்தைய இரவின் அன்றாடச் செல்பாடுகள்தான்.

அப்படிப் படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தை வாசிக்கத் துவங்கியவுடன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் தூங்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர்த்துப் புத்தகங்களுக்குள்ளே மூழ்கடித்து ஒட்டுமொத்தத் தூக்கத்தையுமே மறக்கடிக்கச் செய்வதும் சில புத்தகங்களின் தலையாயக் கடமையாக இருந்துவிடுவதும் வழக்கம்தான்.

சமீபத்திய ஓர்நாளில் அதேபோன்றதொரு விழித்த இரவினில் வாசித்த புத்தகமொன்றுத் தூக்கத்தையும் கெடுத்தது. ஆனால், விழித்துக் கொண்டே கனவையும் காணச் செய்து, கனவுலகப் பயணத்தையும் துவங்கி வைத்ததோடல்லாமல் சிறுவயது நினைவுகளையும், செய்தக் குறும்புகளையும் சிந்தனையின் வாயிலாக அசைபோட செய்துவிட்டது எஸ்.பாலபாரதி எழுதிய ஆமை காட்டிய அற்புத உலகம்என்ற சிறார் நாவல்.

பொதுவாகச் சிறார் புத்தககங்கள் என்பது எட்டு வயதிலிருந்து ஆரம்பமாகி பதினைந்து வயதிலானவர்களுக்காக எழுதப்படுவதுதான் என்றால். இப்புத்தகத்திற்கான உணர்வின் மதிப்புகளை அவ்வயதிலிருப்பவர்கள் எழுதுவதுதான் சிறப்பானவோன்றாக இருக்கும். அனால், அதற்கான சாத்திய கூறுகள் நம்நாட்டுச் சூழலில் மிகமிகக் குறைவு என்பதால் அவ்வயதையோத்த மனநிலைக்குத் தங்களை அவ்வபோது கொண்டு செல்பவர்கள் எழுதுவதுதான் சரியானதாகயிருக்குமென எண்ணி இதை எழுதுகிறேன்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களைச் சாகசப் பிரியர்களாக வைத்துக் கொள்வதில் என்றைக்குமே அலாதியான ஆர்வம் இருந்து கொண்டேதானிருக்கும். அவற்றிக்கு வயதுவரம்புகள் கிடையாது. இன்று காலைப் பேருந்தில் வருகிற போது மனதிற்குள் சாகசமொன்று ஓடிக் கொண்டிருந்தது சிந்தனையில். அவ்வபோது எனக்கு இது போன்ற சிந்தனைகளும் கனவுகளும் வருவது இயல்புதான் என்றாலும் இன்றைய காலைப்பொழுது என்பது கூடுதல் சிறப்பு.

கால்களைத் தரையில் ஊன்றி நிற்கிறேன். திடிரெனப் பூகம்பம் வருகிறது பூமி இரண்டாகப் பிளக்கிறது. பிளந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் பழைய நிலைக்கு மூடவும் செய்கிறது பூமி. பிளவிற்கு உள்ளே செல்லும் நான், என்னுடன் பிளவில் விழுந்தவர்களைக் காப்பாற்ற எனது கைகளால் பிளவு மூடாமளிருக்கும் படித் தடுத்து நிறுதுத்திக் கொள்ள அனைவரும் மேலே ஏறிவிடுகின்றனர். இறுதியாக நான் ஏறலாமென்று நினைத்துக் கைகளையெடுக்கும் போது பூமி மூடி விடுகிறது.

உள்ளே மாட்டிக் கொண்ட நான் என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணை நோண்ட ஆரம்பித்துப் புதைக்கப் பட்ட மனிதப் பிணங்கள், பல நிலகரிச் சுரங்கங்கள், எண்ணைக் கிணறுகள், இன்னும் பல கனிமவளங்கள் போன்றவற்றைக் கடந்து ஒரு பகுதியில் வெளியேறுகிறேன். அப்பகுதி ஆஸ்திரேலிய கண்டமாக இருக்கிறது. அதான் வராத இடத்திற்கு வந்திருகிறோமே எனச் சொல்லி வெளிவந்த குழிக்கு அடையாளம் வைத்து மோடி விட்டு ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றலாம் எனக் கிளம்புகிறேன். சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் குழிக்குள் நோண்ட ஆரம்பித்து ஒவ்வொரு கண்டமாகப் பாதையமைத்து உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கிறேன். இடையிடையே டைனோசர் மற்றும் மமூத்துடன் கொஞ்சி விளையாடல் என அனைத்தையும் முடித்து இறுதியாகப் பேருந்தை விட்டு இறங்கிய சென்னை டைலர்ஸ் ரோட்டில் எழுந்து நிற்கிறேன் உலகை பூமிக்கடியின் மூலமாகவே அரைமணிநேரத்தில் சுற்றியிருக்கிறேன் என்ற சாகசத்துடன்.இப்போது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம் முழுவதிற்குமான ரகசியப் பாதையொன்று எனது கனவுலத்தில் இருக்கிறது. கனவுக்கண்டத் தூரமோ சேப்பாக்கம் முதல் டைலர்ஸ் ரோடு வரைதான். இருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன்.

இதே போன்ற தனது சிறுவயது சாகசக் கனவைத்தான் சிறு நாவலாக எழுதியிருக்கிறார் எஸ்.பாலபாரதி. ஆனால் கனவை மட்டுமே கதையாகக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் மற்றும் கடல் உயிரினங்களின் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் சொல்லியிருப்பது சிறார்களிடம் நாம் எதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தெளிவோடு செயல் பட்டிருப்பதற்காகவே பெரும் வாழ்த்தினைக் கூறவேண்டும்.

தொடர்ந்து இது போன்ற சிறார் நாவல்கள் தமிழ் அதிகளவு வர வேண்டும் அவற்றையெல்லாம் விட வருகிற புத்தகங்களைச் சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அவர்களை வாசிப்பனுபவத்திற்குக் கொண்டு செல்வதற்கான செயல் திட்டங்களும் இங்குத் தேவை எனபதையும் நாம் அனைவரும் உணரவேண்டும்.

மொத்தத்தில் ஆமை காட்டிய அற்புத உலகம்படிப்பவர்களின் சாகசக் கனவுகளையும் சுற்றுச்சூழல் பற்றிய அதிலும் குறிப்பாகக் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலின் சூழல் கேடு பற்றிய ஆரம்பநிலைப் புரிதல்களை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

#
இனியன்


7 Jul 2016

சாம்பலாகிப் போன டவுசரும், ஜட்டியும்

சில நேரம் நாம் செய்கின்ற கிறுக்குத் தனமான குறும்புகள் மற்றும் செயல்பாடுகளால் அப்போதைக்கு வேதனையடைந்திருந்தாலும் அவற்றை நினைத்துப் பார்க்கும் போது நம்மையறியாமல் சிரித்துக் கொள்வோம்.
"டிப்ளோமா படித்துக் கொண்டிருந்த காலம். லுங்கிக் கட்டிப் பழகாதக் காலமும் கூட... மழை காலமும் தான்."
"வீட்டில் யாருமில்லாத மாலைப் பொழுதொன்றில் நல்ல மழை... அதான் வீட்டுலதான் யாருமில்லையேன்னு கொல்லையில துணிதுவைக்கிற கல்லுல உட்கார்ந்து நல்லா நனையிறேன்."
"அம்மா இருந்திருந்தாக் கண்டிப்பாத் திட்டுதான். ஏன்னா, நான் நனையிறத விட நனைந்த துணிகளைக் காய வைப்பதிலும்.... அதைனைத் துவைத்துப் போடுவதிலும் இருக்கும் சிக்கல்தான் காரணம். அப்போ வீட்டுல வாசிங் மிசினெல்லாம் இல்ல வீட்டுல."
"நனைஞ்சி முடித்த பிறகுதான் நினைவுக்கு வந்துச்சி. நேற்று துவைத்துக் காயவைத்த துணியே காயலைன்னு 'திருச்சி தைலா சில்கஸ்'ல எடுத்த பருமடாஸ்யைக் காலையிலதான் எடுத்துப் போட்டிருந்தேன்."
"அதையும் அம்மா வேற புது டவுசர் போட்டிருந்த வேறப் பார்த்திருந்தாங்க."
"அதனால, புது டவுசர நனைச்சி வச்சிருக்கிறதப் பார்த்தாங்கப் பேயோட்டம் நிச்சைமுன்னு நினைத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்த போது வந்தது அந்த யோசனை"
"டவுசர அவுத்துத் தண்ணீர் சொட்டுகள் நல்லாப் போகும்வரை பிழிந்து விட்டுத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு சமயலறைக்குச் சென்று இட்லி குண்டானை எடுத்துதேன்...அதிலும் எவர்சில்வர் குண்டானைதான் எடுத்தேன்."
"அலுமினிய குண்டான் இருந்தாலும் அத எடுக்கல."
"இட்லி குண்டானை எடுத்த போது தான் உடம்பில் இன்னும் ஈரம் குறையாதை உணர்ந்தேன். அடஆமாம்... ஜட்டியும் நனைந்திருந்தது.... சரின்னு ...அதையும் நன்றாகப் பிழிந்துக் கையில் வைத்துக் கொண்டு கேஸ் அடுப்பின் பெரிய பர்னரை பற்றவைத்து இட்லி குண்டானை இட்லித் தட்டுகள் ஏதுமில்லாமா அடுப்பில் வைத்து டவுசரையும் ஜட்டியையும் அதில் போட்டு மூடி விட்டேன் சூட்டில் காயட்டும் என்பதற்காக."
"ஆனால் நடந்ததென்னமோ வேற"
"வெறும் துண்ட மட்டும் கட்டிக்கிட்டு நிக்கிறேன். அந்த நேரம் பார்த்து நல்லா குளிர் எடுக்குது."
"அறைக்குப் போய்க் காய்த்திருந்த பழைய ஜட்டியோன்றை எடுத்துப் போட்டுக்கிட்டு முதல் முறையா அப்பாவின் லுங்கிய ஏனோதானோன்னுச் சுத்திகிட்டு அப்படியே கொஞ்ச நேரம் கட்டில்ல உட்கார்ந்தேன்"
"கட்டிலிலதான் உட்கார்ந்தேன். எப்பப் படுத்தேன், எப்பத் தூங்கினேன்... ஏன் அந்த நேரத்தில் தூங்கினேன் என்றெல்லாம் இன்றுவரை யோசித்தும் விடை மட்டும் கிடைகவேயில்ல... ஆனா, தூங்கினேன்."
நாற்பத்தைந்து நிமிடத்திற்குப் பிறகு...
"வீடு முழுக்க ஒரே புகை மண்டலம் எனக்கும் கண்ணெரிச்சல் வர ஆரம்பித்தது...அப்பாவும் பொறுமையாகவே எழுந்துப் புகை மூட்டத்தைப் பார்த்த்தப் பிறகுதான் குண்டான அடுப்புல வச்ச மேட்டரே நினைவுக்கு வரக் குடுகுடுன்னு ஓடினேன் அடுப்பறைக்கு."
"அங்க போய்ப் பார்த்தா... ஒரே புகை மூட்டம்... பழைய படங்களில் வரும் கனவுக் காட்சி போல"
"அப்படியிப்படி எல்லா ஜென்னலையும் திறந்துவிட்டு, அடுப்பு பக்கத்த்துல போனா... எவர்சில்வர் இட்லி குண்டான் நெருப்பு குண்டானா மாறிகிடக்குது."
"அடுப்பை நிறுத்திட்டு, அடுத்தது என்ன பண்ணலாமுன்னு யோசித்தேன்."
"அப்போ கண்ணுலப் பட்டத்துதான் வீட்டுல இருக்கிற இரும்பு கிடிக்கி.... அத எடுத்து... இட்லி குண்டா மூடிய மட்டும் கலட்டலாமுன்னு முயற்சி செஞ்சா... மூடியோட கைப்பிடிக் கொக்கித் தனியா வருது... அதனால அந்த முயற்சிய கைவிட்டுட்டு.... கரித் துணியாப் பயன்படும் அம்மாவின் பழைய ஜாக்கெட் துணியத் தண்ணில நனைச்சி ரெண்டு கையாலையும் குண்டான தூக்கி அப்படியே பக்கத்திலிருந்த பாத்திரம் தேய்க்கும் சிங்கில் போட்டு குழாயை திறந்து விட்டேன்."
“தண்ணி பட்டவுடன் புஸ்ன்னு... சத்தத்தோட இட்லி குண்டான் புகைக் கக்கியப் படித் தனது சூட்டைத் தனித்துக் கொண்டிருந்தது.... ஆனா எனக்கோ உள்ளுக்குள்ள சூடு பத்திக்க ஆரம்பிச்சது”.
"எதுவாயிருந்தாலும் சமாளிப்போம்... மோதல இட்லி குண்டான் உள்ளே போட்ட டவுசரும் ஜட்டியும் என்னாச்சின்னுப் பார்ப்போமுன்னு குண்டான் சூட்டக் குறைச்சி.... குண்டான் மூடியக் கழட்டினா...டவுசரும், ஜட்டியும் சாம்பலாகப் போயிருந்தது."
"இன்னைக்கு வீட்டுல தீபாவளிதான் அப்படின்னு நினைச்சிகிட்டே சாம்பலை எப்போதும் குப்பைப் போடும் பக்கத்து காலி பிளாட்டுலக் கொட்டிட்டு குண்டான கழுவலாமுன்னு தண்ணிய ஊத்தினா..... குண்டானும் ஒட்டையாகிக் கிடக்குது..... செத்தடா மவனேன்னு....கழுவிகிட்டு இருக்கும் போது காலிங் பெல் அடிக்க... வெளியே போயிருந்த அம்மா வீட்டுக்கு ரிட்டன்.... கதவைத் திறந்தேன்.... சிறிதளவு சுற்றிக் கொண்டிருந்த புகைகுள்ளே உள்ளே வந்தவங்க என்னான்னுக் கேட்க.... நானும் அசட்டுச் சிரிப்புச் சிரிச்சிகிட்டே பதில் சொல்ல.... வீட்டினுள் ஆரம்பித்தது அடமழ.... அடடா மழ.... அய்யையோ மழ என எல்லாம்."
அவ்வப்போது நான் நினைத்துச் சிரித்துக் கொள்ளும் எனது சேட்டைகளில் இதுவும் ஒன்று....
இப்ப ஏன் இதச் சொல்றேன்னா....
கடந்த வாரம் திருவாரூர் நிகழ்வு முடிச்சிட்டு மறுநாள் குடும்பத்தில் நடக்கவிருந்த திருமண கறிவிருந்தில் கலந்து கொள்ள வீடுக்குப் போயிருந்தப்ப.... வீட்டுல யாரமில்ல... சரி எப்போதும் போல நாமே வாசிங் மிசின்லத் துணியப் போட்டு துவச்சிடுவோமுன்னு மிசின்ல சட்டையையும் ஜீன்சையும் போட்டு பவுடரையும் போட்டுட்டு திரும்பும் போதுதான் “ரின் ஆலா” டப்பி கண்ணுல பட்டது."
"குழந்தைகளுடன் மண்ணில் விளையாடியதில் சட்டை நல்லாவே அழுக்காகியிருக்கேன்னு சொல்லிச் சிறிதளவு என்று சொல்ல முடியாது சற்று அதிகமாவே ஆலாவை ஊற்றி மிசினை ஓடவிட்டேன்."
"மிசினும் ஓடி முடிந்தது.... இப்பச் சட்டைய எடுத்து பார்த்தா.... எனக்குப் பிடித்த நீலக்கலர் சட்டையெல்லாம் ஆங்காங்கே திப்பிதிப்பியாக வண்ணம் போய் வெள்ளையாகக் காட்சியளிகிறது."
"இதைப் பார்த்து விட்டு அம்மா சொல்றாங்க உனக்கு இதே வேலைதான் வீட்டுல யாருமில்லைன்னா ஏதாவது பண்ணிக்கிட்டே இருன்னு சொல்லித் திட்டிட்டு.... அப்புறமாச் சொல்றாங்க ஆலா வெள்ளை நிறத் துணிகளுக்கு மட்டும்தான் உபயோகப் படுத்தனுமுன்னு....
இந்த ஆலா மேட்டர் நடந்ததால பழைய டவுசர் சாம்பலான கதையும் நினைவுக்கு ஓடிகிட்டு இருக்கு ஒரு வாரமா!!!!.... இப்படிப் பலயிருக்குக் குறும்புத் தனங்கள் அவ்வபோது அசைபோட்டு ரசிப்பதற்கும் சிரிப்பதற்கும்....
#இனியன்

வருடத்தின் முதல் நாவல் என் நாவில்

ஆனி முடிந்து ஆடி துவங்கும் வேளையில் கிடைக்கும் நாவல் பழங்களின் மீது அலாதியான பேரன்புக் கொண்டவன் நான். அதிலும் நாட்டு நாவல் என்றால் சொல்லவே வேண்டாம். நாளடையில் நாட்டு நாவல் வரத்து குறைந்து வரும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக எளிதில் கிடைப்பதென்பது வரம்.
கடந்த வெள்ளி கிழமை கூட அலுவலக நாவல் மரத்தை அனார்ந்துப் பார்த்து விட்டுத்தான் சென்றேன். ஒரு பழங்கள் கூட விழுவதற்கான அறிகுறிகள் இல்லை.
ஆனால், இன்று காலை அலுவலகம் வந்து எனது அறை ஜென்னலைத் திறந்த பின் பார்த்தால் தரையெங்கும் நாவல் பழங்கள் சிதறிக் கிடக்க, "வீட்டில் அடைத்து வளர்க்கப்படும் குழந்தைகளை மைதானத்தில் இறக்கிவிட்ட பின்பு குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடுவது போல் ஓடிச்சென்று, ஒரு முழு நாவலை எடுத்தேன் இவ்வருடத்திற்கான எனது முதல் நாவலை."
"எதிர்பாராத தருணத்தில் காதலி கொடுத்த நீண்ட முத்தத்தின் சுகத்தை அனுபவித்த உணர்வோடு வாயில் போட்டு, கண்களை மூடியும் பழத்தை வாயினுல் நாவால் சுழற்றியும் மெல்லக் கடித்து அதன் சாற்றை மெதுவாக உறிந்தும் மெதுமெதுவாகத் தொண்டைக் குழியினுள் இறக்கினேன்."
"ஆஹா, என்னவொரு பேரானந்தம்"
அப்படியே தட்டு ஒன்றை எடுத்து வந்து விழுந்துக் கிடந்த அனைத்தையும் எடுத்தால் தட்டு நிரம்புமளவிற்குக் கிடைத்துவிட்டது. அப்படியே, தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்து அலுவலகச் சமையலறையிலிருந்து எடுத்து வந்த உப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு அலுவலக நண்பர்களுக்கு ஆளாளுக்கு எண்ணி நான்கு நான்கு மட்டும் கொடுத்து விட்டு தட்டுடன் எனது மேசையில் வந்தமர்ந்துச் சுவைக்க ஆரம்பிச்சாச்சி. இனி ஆடி மாதம் முடியும் வரை நாவல்பழ விருந்துதான்.

#இனியன்

29 Jun 2016

ரசனைக்காரனின் கோபக் கவிதைகள் “லெமூரியக் கண்டத்து மீன்கள்”

ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் சில புத்தகங்கள் அதன் சாரம்சத்தினைத் தாண்டி ஆவலைத் தூண்டுவது புத்தகத்தின் பெயர், அட்டைப்படம் மற்றும் எழுத்தாளரின் முந்தைய செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகுக்கிறது. அதிலும் கவிதைத் தொகுப்பாக இருந்தால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படவே செய்கிறது. 

இந்த நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் இணையம், முகநூல் மற்றும் வாட்ஸ் - அப் வழியே பல கவிஞர்களும் தங்கள் கவித்திறனை வெளிபடுத்திக் கொண்டிருக்கும் காலக்கட்டம். இதில் பலரது படைப்புகள் தங்களது சுயம் சார்ந்த பதிவுகளாகவே வளம் வருகிறது. அதில் சிலரது படைப்புகள் மட்டுமே நம்மைத் தொடர்ந்து அவர்களையும்அவர்களது எழுத்துகளையும் தொடர் வைத்துவிடுகிறது. 

அப்படி நாம் தொடரும் நபர்களின் படைப்புத் தொகுப்பாக வருகிற போது, இருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். ஒன்று நாம்தான் ஏற்கனவே படித்துவிட்டோமே அதிலென்ன இருக்கப்போகிறது என்ற அலட்சியமும். இரண்டாவதாக ஏதாவது புதிதாக இருக்குமா என்கிற எண்ணமும் வரும். இவற்றில் இரண்டாவது எண்ணம் எழுவதென்பது மிகவும் அரிதுதான். அதிலும் குறிப்பாகக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளைப் பொறுத்த வரையில் இவ்வெண்ணம் வருவது அரிதிலும் அரிதாகத்தான் இருகிறது சமகாலத்தில். 
இவற்றை மீறி வருகிற புத்தகங்களை உடனடியாகப் படித்துவிட வேண்டுமென்ற உந்துதல் வந்துவிடுகிறது. அப்படிப்பட்டப் புத்தகமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் ஆன்மன் எழுதியிருக்கும் லெமூரியக் கண்டத்து மீன்கள்கவிதை தொகுப்பு.


புத்தகம் முகவரித் தேடி வந்த போது அதைப் பெற்றுக் கொள்ள நானில்லை அங்கு. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் உறைப் பிரித்துப் புத்தகத்தை வெளியெடுத்து முகர்ந்துப் பார்த்துவிட்டுக் கைக்கு வந்தபக்கத்தைப் புரட்டிய பொழுது முதலில் தென்பட்டக் கவிதை

அபத்தமாய் இருக்கிறது
 தனிமையைத்
 தனிமையெனச்
 சொல்வது
என்கிற வரிகளைப் படித்தவுடன் தனியறையில், தனித்த பயணத்தில், தனித்த புன்னகையில், தனித்த உறக்கத்தில், தனித்துக் கிடக்கும் எனது வலிகளில் என அனைத்திலும் தனித்திருந்தாலும் என்றும்  தனிமையை உணராதிருக்கும் எனக்கு வாழ்வியல் நெருக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவே இருந்தது.

மேலும், ஒருசிலக் கவிதைகளை வாசித்த போது எக்காரணங்களுக்காக எல்லாம் என்னுள் கோபம் வருகிறதோ?... அதே காரணங்களுக்கான கோபங்களைக் கவிதைகளில் உணரமுடிந்தது.” 

அச்சிலக் கவிதைகளுடன் மூடிவைத்து விட்டு பிறகு படித்துக் கொள்ளலாமெனப் பொறுத்துப் படிக்க ஆரம்பித்த இந்தப் பத்து நாட்களில் நான்கு முறைகள் வாசித்து விட்டேன். என்னைப் போன்ற அரைகுறைக் கவிதை வாசிப்பாளனுக்குச் சிரமப்பட்டு மீண்டும்மீண்டும் படித்து அர்த்தங்களைத் தேடவேண்டிய கவிதைகளுக்கு மத்தியில், வாசித்தவுடன்  சிந்தனையில் ஒட்டிக் கொண்டு நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்த கூடிய எளிமையான கவிதைகளைத் தொகுப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த நிறைவைத் தந்தன இந்த மீன்கள்.

கவிஞர்களின் சமூகக் கோபம் என்பது வீரியமிக்கதாகயிருக்கும் என்பதை மீண்டுமொரு கவிஞர் தன் வீட்டுச் ஜென்னலின் வழியே மட்டுமே கண்டு கவிதையின் வாயிலாக எழுதாமல், சமூகத்தின் கூடவே நடக்க முயற்சித்து அந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு பெண்ணியம், ஈழம், கல்வி, தத்துவம், சூழலியல், அரசியல் எனத் தொகுப்பு முழுவதும் விரிந்துக் கிடக்கிறது.”  உதாரணமாக யுத்தம் என்றொரு கவிதை,

"கத்தியின்றி
  ரத்தமின்றி
  யுத்தஞ் செய்றான்
  கார்ப்பரேட்டு
  அட
  கம்முனு கெட
  கத்துனா
  நீ நக்சலைட்டு"

இவற்றிற்கெல்லாம் முத்தாயிப்பாக ஒரு கவிஞன் தனக்குக் கிடைக்கும் கிடைக்கப் போகும் மகுடத்தைத் தூர எறிகிறான் என்றால் அவனது கோபத்தின் உச்சம் மிக எளிதாகவே புரிந்துவிடுகிறது "விடுதலை" என்கிற கவிதை

" கூண்டைத் திறந்துவிடு
   தூர எரிகிறேன்
   தூக்கிச் செல்
  நீ அணிவித்த மகுடத்தை" 

இப்படியாகப் பல கவிதைகளைச் சொல்லிக் கொண்டும், ரசித்துக்  கொண்டும் செல்லும் நேரத்தில் உரக்கச் சிந்தனை ஒன்று ஓங்கி வருகிறது. அதுதான்  இத்தொகுப்பில் காதல் கவிதைகள் இல்லை என்பது. ஆனால் தொகுப்புக் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இணையத்தில் பதிவிடப்படும் காதல் கவிதைகளில் ஒன்றிரண்டையாவது சேர்த்திருக்கலாம்  தொகுப்பில்.

கூடுதல் சிறப்பாக இக்கவிதைகளை வாசிக்கும் போது சில நேரம் கண் மூடி கவிஞர் ஆன்மன்னின் குரலில் சொல்வது போல் நினைத்துப் பார்த்ததுண்டு. அதனால்,  மரங்கள் நிறைந்த வனத்தில் சிற்றோடையின் சலசலப்பிற்கு நடுவே மங்கிய ஓர் மாலை வேளையில் சிறுமிடறு மதுக்குப் பிறகானப் போதையில்லா போதைக்கிடையில் ஆன்மன்னின் குரலில் ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கச் சொல்லி ரசித்திட வேண்டும். அப்படியொரு களவாடும் குரலுக்குச் சொந்தக்காரர். அதேபோல் அடுத்தடுத்த தொகுப்புகளை வெளியிடும் போது வெளியீட்டு விழாவை அழகிய வனத்தில் வைத்திடவும் ஆயத்தம் செய்த வேண்டும்.   

மொத்தத்தில் ஆன்மன்னின் லெமூரியக் கண்டத்து மீன்கள் கவிதை தொகுப்பு ஒரு ரசனைக்காரனின் கோபக் கவிதைகள் என ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

22 Jun 2016

கதாநாயகன் ஆனேன்

அழைத்துப் பேசிய அரைமணி நேரத்திற்குள்ளாக மொத்தக் குடும்பமும் சேப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டனர்.

"என்னைக் கண்டவுடன் மாமா என்று கத்தியபடித் துள்ளிக்குதித்து ஓடியாந்து, ஒரே துள்ளலில் என் கைகளில் வந்தடைன்தவள். கன்னத்தில் முத்தங்கள் கொடுத்துச் சிரித்தாள்."

"இவள்தான் இப்படியென்றால், அவள் தம்பி குட்டிப்பையன் அறிவோ அதற்கு மேல் இருக்கிற நான்கு பற்களைக் காட்டிய படியே அம்மாவின் கையிலிருந்து தாவி 'அக்கா மாமா, அக்கா மாமா' என்று சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தான். யாழினியை இறக்கிவிட்டு அவனை வாங்கியதும் அக்காவைப் போல இவனும் முத்த மழை."

அதுவென்ன அக்கா மாமான்னுக் கேட்க, அக்கா என்னை மாமா என்று அழைப்பதால் அவனுக்கு நான் அக்கா மாமாவாம்.

அதன் பின்னர் அனைவரும் கடற்கரைப் போகலாமென முடிவெடுக்க. " அப்பா, நீங்க அம்மாவையும், தம்பியையும் வண்டியிலக் கூட்டிட்டுப் போங்க, நான் மாமாவோட நடந்து வருகிறேன்." , எனச் சொன்னவளைக் கைப் பிடித்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.

மாமா எனத் துவங்கிப் பேச ஆரம்பித்தவள். " தம்பி, கல்லால் என் மண்டைய ஓடச்சிட்டான்" , " ஸ்கூல் மாறப் போறேன்" , "தம்பி ரொம்ப அடம்பிடிக்கிறான், அதனால அவனப் பால்வாடிலச் சேக்கப் போறாங்க" , " அப்புறம் அம்மா நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சி கொடுத்தாங்க" என அடுக்கடுக்காகப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தவள் போன தடவ போன் பண்ணுனப்ப ஊருல இருக்கேன்னு சொன்னீங்களே!... எந்த ஊருக்கு போயிருந்தீங்கன்னுக் கேள்வி கேட்க ஆரம்பிக்க.

நானும் கடந்த இரு மாதங்களில் எங்கெல்லாம் சென்றேனோ அனைத்தையும் ஒன்று விடாமால் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாலா அவர்களை இறக்கி விட்டு விட்டு எங்களை அழைக்க வந்து விட்டார்.

கடற்கரைச் சென்றவுடன், குட்டிபையன் அறிவிடம் என்னடாப் பையா பால்வாடிப் போகபோறியாமே என்றதும் சிரித்துக் கொண்டே.... ஈ...ஈ...ஈன்னுத் தலையாட்டினான்"

உன் வயசு என்னடான்னுக் கேட்டதற்கு "தென்ற"ன்னுப் பதில் சொல்ல, நான் அதற்குள்ளவெல்லாம் பள்ளிக்குச் செல்லவும் வேண்டாம், அனுப்பவும் வேண்டாமென்று பாலாவிடம் சொல்லிய வாரே கடற்கரையினுள் சென்றோம்.

உள்ளே சென்றவுடன் ஓடி - பிடித்துத் துவங்கி, கிச்சிகிச்சித் தாம்பூலம் வரை பல விளையாட்டுகளை விளையாடியும் மணலில் ஆட்டம் போட்டும் குதுகலமாக இருந்துவிட்டுக் கிளம்பும் போது யாழினியின் அம்மா சொன்னா விசையம்தான் நேற்றைய மாலையை அழகாகியதொடு மட்டுமல்லாமல் ஏதோ, நாம சரியாதான் போயட்டிருகிறோமுன்னு நினைக்கத் தோன்றியது.

“தினமும் யாழினிக்கு கதைச் சொல்ல வேண்டுமாம். அப்படிக் கதைச் சொல்லும் போது கதையின் நாயகனாக இனியன் என்ற பெயர் இருக்க வேண்டுமாம். அந்தப் பெயர் இல்லையென்றால் பாப்பா கதையே கேட்பதில்லை. உங்களுடன் பேச ஆரம்பித்த பின்பு ரொம்பவே மாறியிருக்கா, பேச்சில், செயலில் கொஞ்சம் தெளிவாயிருக்கா. மாமா மாதிரி நிறையப் புத்தகம் படிக்கணுமுன்னு சொல்லுறா, உங்களை வச்சிக் கதைச் சொல்ல எனக்கும் போர் அடிக்குது அதனால எனக்குப் போர் அடிகிறப்ப போன் போட்டு தாறேன் இனிமே நீங்களே சொல்லிக்கோங்க” என்றெல்லாம் அவங்க சொல்லச் சொல்ல மௌனமான புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்து கொண்டியிருந்தேன்.

ஆனால், உள்ளுக்குள் போய்க்கொண்டிருக்கும் பாதையில் சரியாகத்தான் போய்கொண்டிருகிறோம் என்ற எண்ணமும், கூடவே அதீதப் பயமும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் போல என்கிற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது/ கொண்டிருகிறது.

அதற்குள்ளாக, பாலா ஆளுகொரு அவித்த சோளக் கருத்துகளுடன் வந்து நிற்க. அனைவரும் சாபிட்டுக்கொண்டேயிருக்கும் போது, யாழினி “ அப்பா நீயொரு மஷ்ரூம் காளான்” எனச் சொல்லிச் சிரித்தாள். நான் என்னவென்று கேட்க.

அன்றொருநாள் குடும்பத்துடன் அனைவரும் எங்கேயோ சென்றிருகின்றனர். அப்போது பாலா சூப் கடைக்குச் சென்று மஷ்ரூம் சூப் ஒன்னு, காளான் சூப் ஒன்னுன்னு அவையிரண்டும் ஒன்றென்று தெரியாமல் ஆர்டர் கொடுக்க. சப்லேயர் சிரித்துக் கொண்டு இரண்டும் ஒன்றுதானே எனக் கேட்க அன்று முதல் இவள் அப்பாவை நீயொரு மஷ்ரூம் காளான்னு கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள். உங்களுடன் பழகிய பிறகுதான் இனியன் இவளிடம் இதுபோன்ற கலாய்த்தல் விசையமெல்லாம் ஆரம்பித்திருக்குன்னு பாலா என்னிடம் சொல்ல. சற்று நேரத்திற்கு முன் யாழினியின் அம்மா சொன்னது நினைவுக்கு வர. பேந்தபேந்த முழித்துக் கொண்டே கலாயித்தலெல்லாம் இல்லையின்னா வாழ்க்க நல்லா இருக்குமான்னுக் கூறிக் கொண்டே அவளைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டேன்.

அப்போது, நாங்கள் நின்றிருத்த இடத்திற்கு நேராக ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தினார். அதில் தற்கால அரசியல் தளபதியின் புகைப்படம் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்ததும் மு.க.ஸ்டாலின் போட்டோ ஓட்டிருக்காங்க என்றால். நான் ஆச்சரியமாக இவரையெல்லாம் தெரியுமா? எனக் கேட்க... காரல் மார்க்ஸ், லெனின் முதல் தற்கால மோடி, சீமான் வரை அனைவரது புகைப்படங்களையும் அடையாளம் சொல்கிறாள் எனச் சொன்னவுடன், நம்ம வார்ப்பு இப்படியில்லை என்றால் தான் சிக்கல் எனச் சொல்லிக் கொண்டே கிளம்பினோம்.

கிளம்பும் போதும், கட்டிபிடித்து இருவரும் மாறிமாறி முத்தமிட்டுச்செல்ல நான் தான் சற்றுப் பெருமைபட்டுக் கொண்டிருகிறேனா? அல்லது பயந்துக் கொண்டிருகிறேனா? என்று புரியாமல் தற்போது வரை குழம்பிய நிலையில் இருக்கிறேன். ஒரு குழந்தை என்னை அவள் உலகின் கதாநாயகனாகப் பாவித்து வருகிறாள் என்பதை எண்ணி. இருப்பினும் அவற்றையெல்லாம் மீறி ஒருவித அமைதிக் கலந்தப் புத்துணர்வும் இது போதுமென்ற மனநிலையுமே ஏற்பட்டிருகிறது.

#இனியன்

அடுத்த தலைமுறை

வழக்கம் போல் அன்றும் tailors ரோடு சென்று அங்கிருந்துப் பேருந்து மாறிச் செல்லலாமென 27B பேருந்தில் ஏறினேன். உடன் நண்பர் ஒருவரும் இருந்தார். அவ்வபோது நான்போகிற பேருந்தில் சிந்தாதிரிப்பேட்டையில் ஏறும் மாணவர்களும் (எந்தக் கல்லூரி என்று தெரியவில்லை), பச்சையப்பா கல்லூரியில் M.phil. படித்துக் கொண்டிருக்கும் பாரவையற்ற மாணவியும் ஏறினர்.

பேருந்தில் சற்றுக் கும்பல் அதிகமாக இருந்ததால் இருக்கைகள் எதுவும் காலியாக இல்லை. உடனே கல்லூரி மாணவர்களில் ஒருவன் அமர்ந்திருந்த பெண்ணை எழச் சொல்லிப் பார்வையற்ற பெண்ணை அமரவைத்தான். பிறகு எப்போதும் போல் பாடல், தாளம் ரகளை எனக் குதூகலமாகச் சென்றது அம்மாணவர்களுக்கு.

ஆனால், அந்தக் குதூகலத்தைப் பார்த்த நண்பர் மாணவர்களை அவர்கள் சேத்துப்பட்டில் இறங்கும் வரை திட்டிக் கொண்டே வந்தார். நானும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேதான் வந்தேன்.

பிறகு இருவரும் tailors ரோட்டில் இறங்கும் போது பார்வையற்ற அந்தப் பெண்ணும் இறங்கினார். வழக்கம்போல் அருகில் சென்று 15B வந்தால் ஏற்றி விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போதும் நண்பர் மாணவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார் இவர்களுக்கெல்லாம் பொறுப்பேயில்லை, அராத்துகள் என்று. உள்ளுக்குள் அவர் அவ்வாறு பேசுவது பிடிக்கவில்லை இருந்தாலும் அவ்விடத்தில் அவரிடம் பதில் பேசுவது உகந்ததல்ல என்று நினைத்துச் சற்று அமைதியாகே இருந்தேன் ஏனென்றால் அவரது குணம் அப்படி அவர் புழம்பும் போது யாராவது குறிகிட்டால் பெருங்கோபம் கொண்டு நம்மை வசைப் பொழிய ஆரம்பித்து விடுவார் மற்றபடிப் பொறுமையாகக் காத்திருந்து எடுத்துச் சொன்னால் புரிந்துக் கொள்ளகூடியவர். அதனால் மாலைக் கூடச் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாகவேயிருந்தேன்.

"சற்று நேரத்தில் அடுத்தடுத்து வருசையாக வெவ்வேறு பேருந்துகள் tailors ரோடு பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்புச் செய்ய. அப்பெண் ஏறவேண்டிய 15B பேருந்து சிக்னலிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு நிறுத்துத்தத்தில் நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளையும் கடந்து நேராகச் சென்றது".

"நான் அப்பெண்ணிடம் பேருந்து நிற்காமல் சென்று கொண்டிருகிறது என்றுசொல்ல முன்நகர்ந்தப் போது, அப்பேருந்திலிருந்து ஒரே சத்தம்".

மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேருந்தை நிறுத்த சொல்ல பேருந்தும் சாலையை அடைத்து நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளுக்கும் சற்று முன்பாகப் போய் நின்றது.

"அப்பேருந்திலிருந்து இறங்கி ஓடி வந்த மாணவர்கள் அப்பெண்ணுக்கருகில் வந்து வாங்கக்கா என்று கை பிடித்து அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி விட்டு, அவர்களும் ஏறியப் பின் மீண்டும் பாடல்கள் தாளம் எனப் பேருந்து புறப்பட்டது".

இச்சம்பவங்கள் நடந்து முடிவதற்குள்ளாக ஆசுவாசத்திற்கு வந்திருந்த நண்பரிடத்தில் கூறினேன். மாணவர்கள் தங்கள் பொழுதுப் போக்குக்காகச் செய்யும் சில காரியங்களை வைத்து அவர்களை வசை பாடாதீங்க. முடிந்தால் அவர்கள் மனோநிலைக்குச் சென்று ரசித்து விடுங்கள். பேருந்தில் இடம்வாங்கித் தந்ததிலிருந்து ஓடுகிற பேருந்தை நிறுத்தி கல்லூரிக்கு அழைத்துச் சென்றது வரை மாணவர்கள்தான். அவர்களை நீங்கள் திட்டுவது போல் தட்டையாகவெல்லாம் பாவித்து விட முடியாது. அவர்களிடம் நல்ல நற்பண்புகள் ஏராளம் இருக்கு அதனைச் சரியான வழிகளில் ஊக்குவித்தல் முந்திய தலைமுறையினரான நமது தலையாயக் கடமையல்லவா.

நாம் எப்போதும் அடுத்தத் தலைமுறையினரைக் குற்றம் சொல்லியே வளர்ந்துவிட்ட சமூகத்தில்தானே இருகிறோம். குறிப்பாக வயது குறைவானவர்களை ஒருவித அடிமைத் தன்மையுடனும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது தமக்குத்தான் எல்லாம் தெரியும், என்ற அகபாவங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்துக் கொண்டிருப்பதுதான் இங்குத் தலையாயப் பிரச்சனை. முதலில் அவற்றிலிருந்து வெளிவர மூத்தவர்கள் வெளிவர முயற்சித்தாலே அவர்கள் சிறப்பானவர்களாகவே வருவார்கள்.

அதைவிடுத்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது... வீனானவர்கள்... வாழத்தெரியாதவர்கள்...பொறுப்பற்றவர்கள்... என்றெல்லாம் வசைபாடிக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்?...

#இனியன்