20 Apr 2016

ரோஹித் வெமுலா

கடந்த மாதம் பல்லாங்குழி நிகழ்விற்காக ஒரத்தநாடு செல்வதற்காக குமபகோணம் பேருந்து ஏறியமர்ந்தப் போது அருகில் இருஇளைஞர்கள் வந்தமர்ந்தனர். உடல் சோர்வு காரணமாகப் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கி விழித்த போது மேல்மருவத்தூர் கடந்திருந்தது.
தூக்கம் களைந்து உடல் சோர்வு நீங்கிய நிலையில் வழக்கம் போல் அருகில் இருந்த இளைஞர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன் அவர்கள் இருவருக்கும் தமிழ் தெரியாது என்பதை அறிமுகத்திலேயே புரிந்துக் கொண்டதால் அரைகுறை ஆங்கிலத்திலேயே உரையாடலைத் தொடர்ந்த எனக்கு அவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் கல்லூரி மாணவர்கள், full science என்ற படிப்பில் grade 2 வில் தானிய வகைகள் மற்றும் அதனைச் சுத்தப்படுத்திப் பதப்படுத்துதல் பற்றிய படிப்பைப் படிப்பதாகவும், அது பற்றிய project விசையமாக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் அமைப்பின் மூலம் தமிழகத் தானியங்கள் மற்றும் அவற்றைச் சுத்திகரித்துப் பாதுகாக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செல்வதாகவும், இந்தப் படிப்புப் படித்தால் இந்தியாவில் வேலை வாய்ப்புக் குறைவு, ஆனால் வெளிநாடுகளில் நாலா வருமானத்தில் வேலையிருக்கு என்று கூறினார்கள்(வெளிநாட்டு மோகம் யாரை விட்டது).
சற்றே வித்தியாசமான வித்தியாசமான படிப்பாக இருக்கிறதே எனக் கூறிக்கொண்டே உரையாடலை ஆந்திர மாநிலக் கல்வி முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்கில் கேள்விகள் கேட்கத் துவங்கிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அக்கேள்விகளால் வெறுப்புற்றவனைப் போலதான் பதில்கள் வந்தது. எனது கேள்விகளை அவன் விரும்பவில்லை. அதனைத் தெரிந்து கொண்டு எனது கேள்விகளை ரோஹித் வெமுலா பற்றித் தெரியுமா என்று கேட்டேன். தாமதமின்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான்.
அவனைப் பொறுத்த வரை ரோஹித் வெமுலாவை ஒரு தலைவனாகவே பார்கிறான். இருமுறை ஹைதராபாத் பல்கலைகழகத்திற்குச் செமினாருக்குச் சென்றிருந்தபோது ரோஹித்தை நேரில் சந்தித்திருகிறான். முதல் முறை வளாகத்தில் நடைப் பெற்ற கூட்டமொன்றில் பேசுவதைக் கேட்டு அவன் பேசிய அரசியல் சற்றுப் புரியாமல் தவித்து, சிறிது சிறிதாக முயற்சி செய்து உள்வாங்கியிருக்கிறான். மற்றொருமுறை பல்கலைகழக வளாக நூலகத்தில் அரைகால் சட்டை முண்டா பணியனோடு அமர்ந்திருக்கிறான் ரோஹித்.
இவன் ஆர்வக் கோளாறில் சென்று ரோஹிதிடம் தன்னை அறிமுகப்படுத்தி நூலகத்தில் இப்படி இருக்கலாமா என்று கேட்டதற்குத் திட்டுகளுடன் திருப்பியனுப்பியிருகிறான் ரோஹித். பின்னர் நூலகர் ரோஹித்தின் இரு JRF பற்றிச் சொல்ல மீண்டும் போய் மனிப்புக் கேட்டுப் பேசியபோது அவ்வளவு இனிமையாகப் பல விசையங்கள் பேசியிருக்கிறான். அந்தச் சந்திப்பிலிருந்து தனக்கும் ஒருவித தெளிவு வந்ததாகவே உணர்ந்தவன் ரோஹித் மீது கடுமையான விமர்சனகளையும் வைத்து அதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகளவிலான மாணவர்களின் உதவியும் பக்கபலமும் வந்திருக்கும். இருதாலும் ABVP மற்றும் அரசாங்கத் தாக்குதலுக்கும் பிறகு அவர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடாது. எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு விதச் சொர்வை ஏற்படுத்துகிறது என்று கூறியவன். ரோஹித்தின் அடையாளத்தை அளிக்க abvpனர் எப்படியெல்லாம் முயற்சி செய்து கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக ஒன்றைக் கூறினான். இவன் ரோஹித்திடம் பேசிவிட்டு வெளிவந்த பொது நான்கு நபர்களால் மிரட்டப்பட்டு உங்கள் கல்லூரியில் ரோஹித்தை சந்தித்தது பற்றியோ பேசியது பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றெல்லாம் மிரட்டப்பட்டிருகின்றான். இப்படியெல்லாம் ரோஹித்தின் அடையாளத்தை அளிக்க அவனது தாய்தந்தைச் சாதியை சொல்லி தற்போது எப்படியெல்லாம் பிரச்சனை பண்ணுகிறார்களோ அது போலவே வளாகத்தினுள் அவனுடன் யார்யார் பேசுகிறார்கள் என்றெல்லாம் கண்காணித்து அவைகளையும் மிரட்டும் பணியும் இருந்து வந்திருகிறது அது போலவேதான் தானும் மிரட்டப்பட்டேன் என்று சொன்னான்.
இந்த உரையாடலுக்குப் பிறகு வேறு தளத்தில் எங்களது உரையாடல் சென்றுது. குறிப்பாக ஆந்திர அரசில் மற்றும் பி.ஜே.பி, ABVP என நீண்டது. உரையாடலின் போது ஒரு விசையம் சொன்னான். ஆந்திராவைப் பொறுத்தவரை மாணவர்கள் மத்தியில் வலதோ, இடதோ அல்லது மத்திய நிலைபாடோ எதுவாக இருதாலும் தங்களுக்குள்ளாகக் குறைந்த பட்ச அரசியல் தெளிவைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டிற்கு நான்கு முறை வந்து போயிருக்கிறேன் எங்களிடமிருக்கும் அந்த அரசியல் தெளிவு இங்கு மாணவர்கள் மத்தியில் இல்லை என்பதைக் காண்பதாகவும் அதனால் தான் தமிழகப் பல்கலைகழகங்கள் எவ்வித கலகங்களும் இல்லாமல் இருக்கிறது என்று கூறினான்.
உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பார்த்தால் நமது பெரும்பான்மையான மாணவர்களிடம் இது போன்ற தெளிவு இல்லை என்கிற தெளிவு நமக்குப் புலப்படும்.

#இனியன்

பயணத்தில் ஒரு காதல் கதை...

அண்ணா மழை வெள்ளமெல்லாம் போதுமா?...
அய்யோ போதும் தம்பி.
ஏன் இவ்வளவு பதட்ட படுறீங்க, உங்க வீட்டுல தண்ணி வந்துடுச்சா?...
அட ஆமாம்ப்பா, டைட்டானிக் படத்துலக் கடைசியில வருமுல அந்த மாதிரி தண்ணியில மிதந்தொம்ப்பா...இன்னும் ஒரு நாள் மழை பெஞ்சிருந்துச்சி அந்தப் படத்துல வரமாதிரி என்ன கட்டில்லுலப் படுக்க வச்சி என் பொண்டாட்டி விசில் ஊதி யாரையாவது கூப்பிடும் நிலை வந்திருக்கும்.
ஹா...ஹா...ஹா...அட அம்புட்டு பாசமாண்ணே உங்க மேல.... டைட்டானிக் படம் மாதிரியே.
அப்படியும் வச்சிக்கலாம். ஆனா அவளுக்குத்தானே நீச்சல் தெரியும். எனக்குத் தெரியாதே. ஆனா உண்மையச் சொன்னா இந்த உலகத்துலையே பாசக்காரின்னா அவ ஒருத்திதாம்பா. நாங்க காதலிக்கும் போதிலிருந்தே அவளோட பாசம்தாம்ப என்னையயும் என் வண்டியையும் ஒட்டிகிட்டிருக்கு. என்னைய விடக் கொஞ்சம் அதிகம் படிச்சவ வேற. அவதான் எனக்கு அந்த டைட்டானிக் படத்தையே பார்க்க வச்சது. எம்பசங்களுக்கும் அவதான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு எல்லாத்தையும் செய்யுறா. அவ இல்லனா நானும் இல்ல என் பொழப்பும் இல்ல தம்பி... எவ்வளவு வெள்ளம் புயல் வந்தாலும் என்னைய அவதான் காப்பாத்துவா.
எம் புள்ளைங்கக் கிட்ட கூடச் சொல்லாதத உங்க கிட்டச் சொல்லியிருக்கேன் தம்பி. அவதான் என் உலகம்தம்பி....
சில ஆட்டோ பயணங்கள் இப்படியும் முடிகிறது. இறுதிவார்த்தை அவர் சொல்லிய போது சற்றே திருபி என்னைப்பார்த்தவர் உதடு மெளிதாகப் புன்னகைத்திருந்தது, கண்களில் கண்ணீர் முத்துகளும் கோர்த்திருந்தது. அதற்குப் பின் அவரிடம் என்னால் பேச முடியவில்லை. அமைதியாகவே பயணித்தோம்.
#இனியன்

Schizophrenia

இரு தினங்களுக்கு முன் Schizophrenia என்ற மன நோயால் பாதித்த கணித மேதை வசித்தா நாராயண் சிங்(Vashishtha Narayan Singh) பற்றிய பதிவு ஒன்றை எனது நிலைத் தகவலில் பதிந்திருந்தேன். அதையொட்டிய பதிவுதான் இது.


அதே நோயால் பாதித்த 16 வயது மானவனைத்தான் தற்போது தினமும் எனது அலுவலகத்தில் நான் உட்பட அனைவரும் எதிர் கொண்டு வருகிறோம். குறிப்பாக எனது பங்குதான் அதில் அதிகம். எனக்குத் தெரிந்த மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசனையாளர்களிடம் இந்நோய் பற்றிக் கேட்டறிந்தப் போது அதில் ஒருவர் கூறியது பெரும்பாலும் இந்நோய்ச் சிறு வயதில் அதாவது குழந்தைகளுக்கு ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளால் குறிப்பாகக் கல்வி மற்றும் ஒழுக்கம் சம்மந்தமாகத் தரப்படும் அழுத்தம் காரணமாகப் பதின் பருவத்தில் துவங்கி நாற்பது வயது வரைக்கும் பாதிப்புகள் உண்டாக வாய்பிருப்பதாகவும். பெரும்பாலும் பெண்கள் அதிகம் பாதிப்பதாகவும் கூறினார். இந்நோய்த் தாக்குண்டவர்கள் அதீத மறதி, அதிகமான பகல்நேரத் தூக்கம், அதிகமான கோபம், எனத் துவங்கித் தன்னிலை மறத்தல் வரை தொடரும். சரியான மருத்துவ ஆலோசனைப் பெற்றால் கண்டிப்பாகக் குணப்படுத்திவிட முடியும் என்று சொன்னார் மருத்துவர். 

அவர் சொல்லி முடித்த பிறகு இந்நோய் பற்றிய தகவலுக்காக இணையத்தைத் தேடியப் போது பல தகவல்கள் வருகிறது. உலகம் முழுவதும் 2.1 கோடி பேர் இந்நோய்ப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 பேர் வரை இறப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனமான WHO தெரிவிக்கிறது. 

எனது மருத்துவ நண்பர் தெரிவித்தது போல் குழந்தைப் பிராயத்தில் ஒழுக்கம் மற்றும் கல்விச் சார்ந்த அழுத்தங்களினால் ஏற்படுகிறது என்றால் அதனை நான் முற்றிலும் ஏற்கத் தயாராகி இருக்கிறேன். காரணம் எனது மாணவனுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்திருகிறது. மகன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மிடில்கிளாஸ் மனநிலை அதிகம் இருக்கும் அவனது வீட்டில் அவனைச் சிறுவயது முதலே பெரிய மெட்ரிக் பள்ளியில் சேர்த்துப் படிப்புத் தொடர்பான அனைத்துச் சித்தர்வதைகளையும் பள்ளியிலும் வீட்டினிலும் கொடுத்து வந்திருகின்றனர் என்பது அவனது பெற்றோகளிடம் பேசியதிலிருந்து தெரிந்தது. அதே போல் கணித மேதை வசித்தா நாராயண் சிங்(Vashishtha Narayan Singh) பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. 

மேலும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒழுக்கம் மற்றும் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற பெயரில் தொடர்ந்து குழந்தைகளை நாம் வதைத்து வருகிறோம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் அதிகமான சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் குழந்தைகள்தான். என்ன உறவு, உரிமை என்கிற பெயரில் நடத்தப்படுவதால் இது போன்ற வன்முறைகள் வெளியே தெரிவதுமில்லை. கண்டு கொள்வதுமில்லை. இது போன்ற வன்முறைகளை கைவிட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற மன நோய்களிலிருந்து சமூகம் விடுபடும்.


#இனியன்

மரணத்தின் வாசல்

நேற்று முன்தினம் மாலை அறைக்குச் சென்ற போது மணி ஆறரை இருக்கு. அறையில் தண்ணீர் இல்லையெனத் தெரிந்திருந்த எனக்குத் தண்ணீர் கொடுக்குமாறுக் கேட்டுக் கொண்டேன். சில நிமிடங்களில் அறையில் தண்ணீர் இருந்தது. நேற்று மாலை அரைமணி நேரத் தாமதத்திற்குப் பிறகுதான் அறைக்கச் சென்றேன். செல்லும் முன்னே யோசித்தேன் இரவு உணவை வாங்கி வரச் சொல்ல வேண்டும்மென. ஆனால் உணவு வாங்கி வருவதற்கான அஜிஸ் பாய்தான் இல்லை. மாலை ஐந்து மணிவரை இருந்தவர் ஐந்தரை மணிக்கு இல்லை. ஆம் மரணித்து விட்டார். அறைக்குச் செல்லும் முன்னே இந்தச் செய்திதான் காதில் விழுந்தது.
மாரடைபிற்குக் கால நேரம் எதுவும் இருக்கா என்ன? அஜிஸ் பாய் பற்றிச் சொல்லணுமுன்னா வாழ்கையிலச் சில பேரைப்பார்த்தால் நம்மையறியாமல் சில சிநேக உணர்வு ஏற்படுமல்லவா அதுபோன்றதோர் முகவமைப்பைப் பெற்றவர் அஜிஸ் பாய். பல நாட்கள் அவரைக் கிண்டகளும் கேளிகளும் செய்திருக்கிறேன். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் இவன் ரொம்ப நல்லவேன்னு வடிவேல் சொல்கிறது போல், எவ்வளவு இறங்கிக் கேளிகள் செய்தாலும் சிரித்துக் கொண்டே உங்களுக்கு வேறு வேலையில்லைன்னுச் சிரித்துக்கொண்டே செல்பவர்.
கேளிகளின் உட்சபட்சமாக வோட்காவில் ஆரஞ்சி ஜூஸ் கலந்து கொடுத்த போது குடித்து விட்டு நீங்க என்னாக் கலந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். இதுவரை குடித்ததில்லை, இனியும் குடிக்கப்போவதுமில்லை ஆனா நல்லாயிருக்குன்னு பதில் சொல்லி என்னைச் செருப்பால் அடிகாத குறையாக யோசிக்க வைத்த மனிதன். மேன்சனில் இருக்கும் அனைவருக்கும் எப்படியோ தெரியாது. ஆனால் என்றாவது ஒருநாள் முடியாத காலங்களில் மட்டுமே சாப்பாடு வாங்கியார அனுப்பும் என்னிடம்தான் நான் சொன்னதை வாங்கி வராமல் அவருக்குப் பிடித்ததை வாங்கிவந்து சாப்பிடுங்க என்று சிரித்துக் கொண்டே சொல்பவர். இப்படி அவரைப் பற்றிப் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே போகலாம். ஆனால் இன்று மதியம் மண்ணுக்குள்ளே இறக்கியாயிற்று.
மரணங்களுக்கு மட்டுமே மரணமென்பதேயில்லை என்பதுதான் எதார்தம். ஆனால் அதைப் புரிந்துக் கொள்வதில் தான் எத்தனையெத்தனை எதார்த்த மீறல்களை அரங்கேற்றிக் கொண்டிருகிறோம் என்பதைப் புரிந்துக் கொண்டுதான் அவர் வீட்டிற்குச் சென்று வந்தோம். அவ்வளவு அழகாக எப்போதும் இருக்கிற புன்னகை முகத்தை விடச் சற்றே அதிகமான புன்னைகையைத் தேக்கிவைத்திருந்தவர் கண்ணாடிப் பெட்டியுனுள் இருந்தார்.
எதிர்ப்பார்த்துக் காத்திருந்துப் பெற்றுவிடும் மரணங்களை விடவும், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் தன்மரணங்களை விடவும், தனக்கே தெரியாமல் தானாக நிகழும் மரணங்களும், மரணித்தவர்களும் அழகாகத் தெரிகிறது.
மரணத்திலும் அழகைத் தேடும் மனநிலையைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் குளிர்நிறைந்த அந்தக் கண்ணாடிப் பெட்டியினுள் அஜிஸ் பாய் அழகாதான் இருந்தார். இன்னும் சிறிது நாட்களுக்கு அறைக்குச் செல்லும் முன் தினமும் வம்பிழுத்து கேளி செய்ய அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பக்கம் கண்கள் அனிச்சையாகத் திரும்பும்.

#இனியன்