8 Jul 2016

ஆமை காட்டிய அற்புத உலகம் ஒரு சாகசக் கனவுலகம்

இரவு நேர உறக்கத்தினிடையே விழித்துக் கொள்வதும், மீண்டும் இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு உறங்கச் செல்வதும் மிகச் சாதாரணமாகத் தினந்தினம் நிகழக் கூடிய அன்றாடச் செயல்பாடாகவே மாறிவிட்ட ஒன்றாகயிருகிறது. விழித்திருக்கும் அவ்விரண்டு மணிநேர விழிப்பில் படிப்பதற்கென்று தலைக்கருகில் புத்தகத்தை வைத்துக் கொள்வதும் முந்தைய இரவின் அன்றாடச் செல்பாடுகள்தான்.

அப்படிப் படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தை வாசிக்கத் துவங்கியவுடன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் தூங்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர்த்துப் புத்தகங்களுக்குள்ளே மூழ்கடித்து ஒட்டுமொத்தத் தூக்கத்தையுமே மறக்கடிக்கச் செய்வதும் சில புத்தகங்களின் தலையாயக் கடமையாக இருந்துவிடுவதும் வழக்கம்தான்.

சமீபத்திய ஓர்நாளில் அதேபோன்றதொரு விழித்த இரவினில் வாசித்த புத்தகமொன்றுத் தூக்கத்தையும் கெடுத்தது. ஆனால், விழித்துக் கொண்டே கனவையும் காணச் செய்து, கனவுலகப் பயணத்தையும் துவங்கி வைத்ததோடல்லாமல் சிறுவயது நினைவுகளையும், செய்தக் குறும்புகளையும் சிந்தனையின் வாயிலாக அசைபோட செய்துவிட்டது எஸ்.பாலபாரதி எழுதிய ஆமை காட்டிய அற்புத உலகம்என்ற சிறார் நாவல்.

பொதுவாகச் சிறார் புத்தககங்கள் என்பது எட்டு வயதிலிருந்து ஆரம்பமாகி பதினைந்து வயதிலானவர்களுக்காக எழுதப்படுவதுதான் என்றால். இப்புத்தகத்திற்கான உணர்வின் மதிப்புகளை அவ்வயதிலிருப்பவர்கள் எழுதுவதுதான் சிறப்பானவோன்றாக இருக்கும். அனால், அதற்கான சாத்திய கூறுகள் நம்நாட்டுச் சூழலில் மிகமிகக் குறைவு என்பதால் அவ்வயதையோத்த மனநிலைக்குத் தங்களை அவ்வபோது கொண்டு செல்பவர்கள் எழுதுவதுதான் சரியானதாகயிருக்குமென எண்ணி இதை எழுதுகிறேன்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களைச் சாகசப் பிரியர்களாக வைத்துக் கொள்வதில் என்றைக்குமே அலாதியான ஆர்வம் இருந்து கொண்டேதானிருக்கும். அவற்றிக்கு வயதுவரம்புகள் கிடையாது. இன்று காலைப் பேருந்தில் வருகிற போது மனதிற்குள் சாகசமொன்று ஓடிக் கொண்டிருந்தது சிந்தனையில். அவ்வபோது எனக்கு இது போன்ற சிந்தனைகளும் கனவுகளும் வருவது இயல்புதான் என்றாலும் இன்றைய காலைப்பொழுது என்பது கூடுதல் சிறப்பு.

கால்களைத் தரையில் ஊன்றி நிற்கிறேன். திடிரெனப் பூகம்பம் வருகிறது பூமி இரண்டாகப் பிளக்கிறது. பிளந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் பழைய நிலைக்கு மூடவும் செய்கிறது பூமி. பிளவிற்கு உள்ளே செல்லும் நான், என்னுடன் பிளவில் விழுந்தவர்களைக் காப்பாற்ற எனது கைகளால் பிளவு மூடாமளிருக்கும் படித் தடுத்து நிறுதுத்திக் கொள்ள அனைவரும் மேலே ஏறிவிடுகின்றனர். இறுதியாக நான் ஏறலாமென்று நினைத்துக் கைகளையெடுக்கும் போது பூமி மூடி விடுகிறது.

உள்ளே மாட்டிக் கொண்ட நான் என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணை நோண்ட ஆரம்பித்துப் புதைக்கப் பட்ட மனிதப் பிணங்கள், பல நிலகரிச் சுரங்கங்கள், எண்ணைக் கிணறுகள், இன்னும் பல கனிமவளங்கள் போன்றவற்றைக் கடந்து ஒரு பகுதியில் வெளியேறுகிறேன். அப்பகுதி ஆஸ்திரேலிய கண்டமாக இருக்கிறது. அதான் வராத இடத்திற்கு வந்திருகிறோமே எனச் சொல்லி வெளிவந்த குழிக்கு அடையாளம் வைத்து மோடி விட்டு ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றலாம் எனக் கிளம்புகிறேன். சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் குழிக்குள் நோண்ட ஆரம்பித்து ஒவ்வொரு கண்டமாகப் பாதையமைத்து உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கிறேன். இடையிடையே டைனோசர் மற்றும் மமூத்துடன் கொஞ்சி விளையாடல் என அனைத்தையும் முடித்து இறுதியாகப் பேருந்தை விட்டு இறங்கிய சென்னை டைலர்ஸ் ரோட்டில் எழுந்து நிற்கிறேன் உலகை பூமிக்கடியின் மூலமாகவே அரைமணிநேரத்தில் சுற்றியிருக்கிறேன் என்ற சாகசத்துடன்.இப்போது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம் முழுவதிற்குமான ரகசியப் பாதையொன்று எனது கனவுலத்தில் இருக்கிறது. கனவுக்கண்டத் தூரமோ சேப்பாக்கம் முதல் டைலர்ஸ் ரோடு வரைதான். இருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன்.

இதே போன்ற தனது சிறுவயது சாகசக் கனவைத்தான் சிறு நாவலாக எழுதியிருக்கிறார் எஸ்.பாலபாரதி. ஆனால் கனவை மட்டுமே கதையாகக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் மற்றும் கடல் உயிரினங்களின் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் சொல்லியிருப்பது சிறார்களிடம் நாம் எதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தெளிவோடு செயல் பட்டிருப்பதற்காகவே பெரும் வாழ்த்தினைக் கூறவேண்டும்.

தொடர்ந்து இது போன்ற சிறார் நாவல்கள் தமிழ் அதிகளவு வர வேண்டும் அவற்றையெல்லாம் விட வருகிற புத்தகங்களைச் சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அவர்களை வாசிப்பனுபவத்திற்குக் கொண்டு செல்வதற்கான செயல் திட்டங்களும் இங்குத் தேவை எனபதையும் நாம் அனைவரும் உணரவேண்டும்.

மொத்தத்தில் ஆமை காட்டிய அற்புத உலகம்படிப்பவர்களின் சாகசக் கனவுகளையும் சுற்றுச்சூழல் பற்றிய அதிலும் குறிப்பாகக் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலின் சூழல் கேடு பற்றிய ஆரம்பநிலைப் புரிதல்களை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

#
இனியன்


7 Jul 2016

சாம்பலாகிப் போன டவுசரும், ஜட்டியும்

சில நேரம் நாம் செய்கின்ற கிறுக்குத் தனமான குறும்புகள் மற்றும் செயல்பாடுகளால் அப்போதைக்கு வேதனையடைந்திருந்தாலும் அவற்றை நினைத்துப் பார்க்கும் போது நம்மையறியாமல் சிரித்துக் கொள்வோம்.
"டிப்ளோமா படித்துக் கொண்டிருந்த காலம். லுங்கிக் கட்டிப் பழகாதக் காலமும் கூட... மழை காலமும் தான்."
"வீட்டில் யாருமில்லாத மாலைப் பொழுதொன்றில் நல்ல மழை... அதான் வீட்டுலதான் யாருமில்லையேன்னு கொல்லையில துணிதுவைக்கிற கல்லுல உட்கார்ந்து நல்லா நனையிறேன்."
"அம்மா இருந்திருந்தாக் கண்டிப்பாத் திட்டுதான். ஏன்னா, நான் நனையிறத விட நனைந்த துணிகளைக் காய வைப்பதிலும்.... அதைனைத் துவைத்துப் போடுவதிலும் இருக்கும் சிக்கல்தான் காரணம். அப்போ வீட்டுல வாசிங் மிசினெல்லாம் இல்ல வீட்டுல."
"நனைஞ்சி முடித்த பிறகுதான் நினைவுக்கு வந்துச்சி. நேற்று துவைத்துக் காயவைத்த துணியே காயலைன்னு 'திருச்சி தைலா சில்கஸ்'ல எடுத்த பருமடாஸ்யைக் காலையிலதான் எடுத்துப் போட்டிருந்தேன்."
"அதையும் அம்மா வேற புது டவுசர் போட்டிருந்த வேறப் பார்த்திருந்தாங்க."
"அதனால, புது டவுசர நனைச்சி வச்சிருக்கிறதப் பார்த்தாங்கப் பேயோட்டம் நிச்சைமுன்னு நினைத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்த போது வந்தது அந்த யோசனை"
"டவுசர அவுத்துத் தண்ணீர் சொட்டுகள் நல்லாப் போகும்வரை பிழிந்து விட்டுத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு சமயலறைக்குச் சென்று இட்லி குண்டானை எடுத்துதேன்...அதிலும் எவர்சில்வர் குண்டானைதான் எடுத்தேன்."
"அலுமினிய குண்டான் இருந்தாலும் அத எடுக்கல."
"இட்லி குண்டானை எடுத்த போது தான் உடம்பில் இன்னும் ஈரம் குறையாதை உணர்ந்தேன். அடஆமாம்... ஜட்டியும் நனைந்திருந்தது.... சரின்னு ...அதையும் நன்றாகப் பிழிந்துக் கையில் வைத்துக் கொண்டு கேஸ் அடுப்பின் பெரிய பர்னரை பற்றவைத்து இட்லி குண்டானை இட்லித் தட்டுகள் ஏதுமில்லாமா அடுப்பில் வைத்து டவுசரையும் ஜட்டியையும் அதில் போட்டு மூடி விட்டேன் சூட்டில் காயட்டும் என்பதற்காக."
"ஆனால் நடந்ததென்னமோ வேற"
"வெறும் துண்ட மட்டும் கட்டிக்கிட்டு நிக்கிறேன். அந்த நேரம் பார்த்து நல்லா குளிர் எடுக்குது."
"அறைக்குப் போய்க் காய்த்திருந்த பழைய ஜட்டியோன்றை எடுத்துப் போட்டுக்கிட்டு முதல் முறையா அப்பாவின் லுங்கிய ஏனோதானோன்னுச் சுத்திகிட்டு அப்படியே கொஞ்ச நேரம் கட்டில்ல உட்கார்ந்தேன்"
"கட்டிலிலதான் உட்கார்ந்தேன். எப்பப் படுத்தேன், எப்பத் தூங்கினேன்... ஏன் அந்த நேரத்தில் தூங்கினேன் என்றெல்லாம் இன்றுவரை யோசித்தும் விடை மட்டும் கிடைகவேயில்ல... ஆனா, தூங்கினேன்."
நாற்பத்தைந்து நிமிடத்திற்குப் பிறகு...
"வீடு முழுக்க ஒரே புகை மண்டலம் எனக்கும் கண்ணெரிச்சல் வர ஆரம்பித்தது...அப்பாவும் பொறுமையாகவே எழுந்துப் புகை மூட்டத்தைப் பார்த்த்தப் பிறகுதான் குண்டான அடுப்புல வச்ச மேட்டரே நினைவுக்கு வரக் குடுகுடுன்னு ஓடினேன் அடுப்பறைக்கு."
"அங்க போய்ப் பார்த்தா... ஒரே புகை மூட்டம்... பழைய படங்களில் வரும் கனவுக் காட்சி போல"
"அப்படியிப்படி எல்லா ஜென்னலையும் திறந்துவிட்டு, அடுப்பு பக்கத்த்துல போனா... எவர்சில்வர் இட்லி குண்டான் நெருப்பு குண்டானா மாறிகிடக்குது."
"அடுப்பை நிறுத்திட்டு, அடுத்தது என்ன பண்ணலாமுன்னு யோசித்தேன்."
"அப்போ கண்ணுலப் பட்டத்துதான் வீட்டுல இருக்கிற இரும்பு கிடிக்கி.... அத எடுத்து... இட்லி குண்டா மூடிய மட்டும் கலட்டலாமுன்னு முயற்சி செஞ்சா... மூடியோட கைப்பிடிக் கொக்கித் தனியா வருது... அதனால அந்த முயற்சிய கைவிட்டுட்டு.... கரித் துணியாப் பயன்படும் அம்மாவின் பழைய ஜாக்கெட் துணியத் தண்ணில நனைச்சி ரெண்டு கையாலையும் குண்டான தூக்கி அப்படியே பக்கத்திலிருந்த பாத்திரம் தேய்க்கும் சிங்கில் போட்டு குழாயை திறந்து விட்டேன்."
“தண்ணி பட்டவுடன் புஸ்ன்னு... சத்தத்தோட இட்லி குண்டான் புகைக் கக்கியப் படித் தனது சூட்டைத் தனித்துக் கொண்டிருந்தது.... ஆனா எனக்கோ உள்ளுக்குள்ள சூடு பத்திக்க ஆரம்பிச்சது”.
"எதுவாயிருந்தாலும் சமாளிப்போம்... மோதல இட்லி குண்டான் உள்ளே போட்ட டவுசரும் ஜட்டியும் என்னாச்சின்னுப் பார்ப்போமுன்னு குண்டான் சூட்டக் குறைச்சி.... குண்டான் மூடியக் கழட்டினா...டவுசரும், ஜட்டியும் சாம்பலாகப் போயிருந்தது."
"இன்னைக்கு வீட்டுல தீபாவளிதான் அப்படின்னு நினைச்சிகிட்டே சாம்பலை எப்போதும் குப்பைப் போடும் பக்கத்து காலி பிளாட்டுலக் கொட்டிட்டு குண்டான கழுவலாமுன்னு தண்ணிய ஊத்தினா..... குண்டானும் ஒட்டையாகிக் கிடக்குது..... செத்தடா மவனேன்னு....கழுவிகிட்டு இருக்கும் போது காலிங் பெல் அடிக்க... வெளியே போயிருந்த அம்மா வீட்டுக்கு ரிட்டன்.... கதவைத் திறந்தேன்.... சிறிதளவு சுற்றிக் கொண்டிருந்த புகைகுள்ளே உள்ளே வந்தவங்க என்னான்னுக் கேட்க.... நானும் அசட்டுச் சிரிப்புச் சிரிச்சிகிட்டே பதில் சொல்ல.... வீட்டினுள் ஆரம்பித்தது அடமழ.... அடடா மழ.... அய்யையோ மழ என எல்லாம்."
அவ்வப்போது நான் நினைத்துச் சிரித்துக் கொள்ளும் எனது சேட்டைகளில் இதுவும் ஒன்று....
இப்ப ஏன் இதச் சொல்றேன்னா....
கடந்த வாரம் திருவாரூர் நிகழ்வு முடிச்சிட்டு மறுநாள் குடும்பத்தில் நடக்கவிருந்த திருமண கறிவிருந்தில் கலந்து கொள்ள வீடுக்குப் போயிருந்தப்ப.... வீட்டுல யாரமில்ல... சரி எப்போதும் போல நாமே வாசிங் மிசின்லத் துணியப் போட்டு துவச்சிடுவோமுன்னு மிசின்ல சட்டையையும் ஜீன்சையும் போட்டு பவுடரையும் போட்டுட்டு திரும்பும் போதுதான் “ரின் ஆலா” டப்பி கண்ணுல பட்டது."
"குழந்தைகளுடன் மண்ணில் விளையாடியதில் சட்டை நல்லாவே அழுக்காகியிருக்கேன்னு சொல்லிச் சிறிதளவு என்று சொல்ல முடியாது சற்று அதிகமாவே ஆலாவை ஊற்றி மிசினை ஓடவிட்டேன்."
"மிசினும் ஓடி முடிந்தது.... இப்பச் சட்டைய எடுத்து பார்த்தா.... எனக்குப் பிடித்த நீலக்கலர் சட்டையெல்லாம் ஆங்காங்கே திப்பிதிப்பியாக வண்ணம் போய் வெள்ளையாகக் காட்சியளிகிறது."
"இதைப் பார்த்து விட்டு அம்மா சொல்றாங்க உனக்கு இதே வேலைதான் வீட்டுல யாருமில்லைன்னா ஏதாவது பண்ணிக்கிட்டே இருன்னு சொல்லித் திட்டிட்டு.... அப்புறமாச் சொல்றாங்க ஆலா வெள்ளை நிறத் துணிகளுக்கு மட்டும்தான் உபயோகப் படுத்தனுமுன்னு....
இந்த ஆலா மேட்டர் நடந்ததால பழைய டவுசர் சாம்பலான கதையும் நினைவுக்கு ஓடிகிட்டு இருக்கு ஒரு வாரமா!!!!.... இப்படிப் பலயிருக்குக் குறும்புத் தனங்கள் அவ்வபோது அசைபோட்டு ரசிப்பதற்கும் சிரிப்பதற்கும்....
#இனியன்

வருடத்தின் முதல் நாவல் என் நாவில்

ஆனி முடிந்து ஆடி துவங்கும் வேளையில் கிடைக்கும் நாவல் பழங்களின் மீது அலாதியான பேரன்புக் கொண்டவன் நான். அதிலும் நாட்டு நாவல் என்றால் சொல்லவே வேண்டாம். நாளடையில் நாட்டு நாவல் வரத்து குறைந்து வரும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக எளிதில் கிடைப்பதென்பது வரம்.
கடந்த வெள்ளி கிழமை கூட அலுவலக நாவல் மரத்தை அனார்ந்துப் பார்த்து விட்டுத்தான் சென்றேன். ஒரு பழங்கள் கூட விழுவதற்கான அறிகுறிகள் இல்லை.
ஆனால், இன்று காலை அலுவலகம் வந்து எனது அறை ஜென்னலைத் திறந்த பின் பார்த்தால் தரையெங்கும் நாவல் பழங்கள் சிதறிக் கிடக்க, "வீட்டில் அடைத்து வளர்க்கப்படும் குழந்தைகளை மைதானத்தில் இறக்கிவிட்ட பின்பு குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடுவது போல் ஓடிச்சென்று, ஒரு முழு நாவலை எடுத்தேன் இவ்வருடத்திற்கான எனது முதல் நாவலை."
"எதிர்பாராத தருணத்தில் காதலி கொடுத்த நீண்ட முத்தத்தின் சுகத்தை அனுபவித்த உணர்வோடு வாயில் போட்டு, கண்களை மூடியும் பழத்தை வாயினுல் நாவால் சுழற்றியும் மெல்லக் கடித்து அதன் சாற்றை மெதுவாக உறிந்தும் மெதுமெதுவாகத் தொண்டைக் குழியினுள் இறக்கினேன்."
"ஆஹா, என்னவொரு பேரானந்தம்"
அப்படியே தட்டு ஒன்றை எடுத்து வந்து விழுந்துக் கிடந்த அனைத்தையும் எடுத்தால் தட்டு நிரம்புமளவிற்குக் கிடைத்துவிட்டது. அப்படியே, தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்து அலுவலகச் சமையலறையிலிருந்து எடுத்து வந்த உப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு அலுவலக நண்பர்களுக்கு ஆளாளுக்கு எண்ணி நான்கு நான்கு மட்டும் கொடுத்து விட்டு தட்டுடன் எனது மேசையில் வந்தமர்ந்துச் சுவைக்க ஆரம்பிச்சாச்சி. இனி ஆடி மாதம் முடியும் வரை நாவல்பழ விருந்துதான்.

#இனியன்