7 May 2015

Philips And The Monkey Pen

ஒரு சில திரைப்படங்களே நம்மையுமறியாமல் நம்முள் ஒன்றாகக் கலந்துவிடுகிறது.அவ்வாறு என்னுள் கலந்தது ஒரு திரைப்படம். இப்படம் எனக்கு அறிமுகமாகிய நான்கு தினங்களில்  ஒன்பது முறைப் பார்த்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது. சமீபகாலத்தில் இதுபோன்று எந்தத் திரைப்படம் அதுவும் குழந்தைகள் திரைப்படம் இந்தளவிற்கு ஈர்த்ததில்லை.

பொதுவாகக் குழந்தைகள் திரைப்படம் என்றால் புனைவுகளை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றியடைகின்ற திரைபடங்கள் அல்லது எதார்த்தைக் கூறுகிறோம் என்ற பெயரில்  எடுக்கப்பட்டுப் படுதோல்வியை அடைகின்ற திரைப்படங்கள் என இரண்டு வையாகவே குழந்தைகள் திரைப்படங்களாக வெளி வருகின்றன. இதில் அனிமேசன் திரைப்படங்களைத் தவிர்த்து விடுவது நல்லது ஏனென்றால் அவை ஒரு மெகா மாயப்புனைவு வைகைத் திரைப்படங்கள்.

ஆனால் மேற்சொன்ன இரண்டு வகையையும் அதாவது புனைவு  மற்றும் எதார்த்தம் போன்ற  இரண்டையும் ஒருசேர சொல்லி குழந்தைகளையும் மற்றுமின்றி அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்ததிருக்கும் திரைப்படம் தான் "Philips and the Monkey pen".

திரைப்படம் இந்தளவிற்கு நெருங்கி வருவதற்குக் காரணமாக இருப்பது சமகாலத்தில் கல்வி என்றப்பெயரில் குழந்தைகள்  எந்தளவிற்கு அவர்களின்  இயல்பை இழந்து கொண்டிருகிறார்கள் என்பதை நாம்  கண்கூடாக  தினம் தினம் பார்த்துக்  கொண்டிருக்கின்ற விசையங்கள்தான். அவ்வாறு தன்னியல்பை மாற்றாத குழந்தைகள்  எந்தளவிற்குப் பாதிப்புள்ளாகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பாதிப்பிலிருந்து  குழந்தைகள் வெளிக் கொண்டுவருவது பெற்றவர்கள், ஆசிரியர்கள், கல்விச் சூழல் போன்றவற்றின் கடமைகளாகக் கொள்ளவேண்டும் என்பதையும் குழந்தைகள் எவ்வாறு இந்தச் சமூகத்து ஏற்றாற்போல் தங்களைக்  கட்டமைத்துக் கொண்டால் சமூகக் காவலர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொல்லி நமது எண்ணத்தைப் பிரதிபலித்ததால் கூட இருக்கலாம்.

ஆசிரியர்களுக்கும் வகுப்புக்கும் அடங்காத குழந்தை ஆசிரியரின் அடி உதைக்குப் பயந்து மனம் வேம்பும் போதெல்லாம் கடவுள் என்கிற கற்பனைக்  கதாபாத்திரம் அக்குழந்தையிடம் பேசுகிறது. அக்கடவுளும் குழந்தையிடம் பேசும் போது குழந்தைப் போட்டிருக்கும் உடையைப் போலவே உடையுடுத்திருப்பது போன்ற காட்சியமைப்புக் குழந்தைகளைக் கொண்டாடுவதற்கான உட்சபட்ச யுக்தி என்றே சொல்லலாம். ஆனால் கடவுளால் கூடக் குழந்தையின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் பூர்த்திச் செய்து விட முடியாது என்று  சொல்லியிருப்பதும். அதற்கு மாறாகக் குழந்தைகளிடம் நாம் எந்தளவிற்கு அவர்களின் உள்ளே சென்று பேசுகிறோமோ அந்தளவிற்கு அவர்களிடம் புரிதல்கள் பூர்த்தியாக்கப்படும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருகிறார்கள் இயக்குனர்கள்.

திரைப்படத்தின் முக்கியக் காட்சியமைப்புகள் எனப் பல காட்சிகளைக் கூறலாம். உதாரணமாகக் குழந்தை பிலிப்ஸ் தன் அப்பாவிடம் கடவுள் கிர்டியனா இல்லை முசிலீமா என்று கேட்கும் கேள்வியும் அதற்குக் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் தரப்படும் விளக்கமும் வெகுவாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே போல் பள்ளித் தலைமையாசிரியர்  கணித ஆசிரியரிடம் பேசும் வசனமான ஒரு வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்களில் இருபது சதவீத மாணவர்கள் மட்டுமே படிப்பிலும் மற்ற அனைத்திலும் மிகுந்த ஆர்வம் இருப்பவர்களாக இருப்பார்கள். அடுத்த இருபது சதவீத மாணவர்கள் சராசரி என்ற வகையில் வருவார்கள். ஆனால் அறுபது சதவீத மாணவர்கள் சராசரிக்கும் குறைவாக இருப்பார்கள். ஆனால்  அவர்களைத் திறமையற்றவகள் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்குள் இருப்பதை வெளிக் கொண்டு வருவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகக் கொள்ளவேண்டும்.என்ற வசனமும். பெற்றோகளிடம் பள்ளி வாகனங்கள் பற்றிப் பேசும் வசனங்களும், தற்போதுள்ள எதிர்பார்ப்பு உலகத்தில் எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கும் மக்களுக்கு ஏற்றாற்போல் அமைத்திருப்பார்கள்.

கணிதம் பற்றிய குழந்தைகளின் அறிவைத் தூண்டுவதற்காக “Life is Maths” என்று சொல்லி வாழ்க்கைக்கும் கணிதத்திற்கும் உண்டான தொடர்பையும் அதன் மூலம் குழந்தைகள் மத்தியில் கணித ஆர்வத்தைத் தூண்டும் காட்சியமைப்புகளும் சிந்தனைத் தூண்டல்.


சிரிக்க வேண்டுமா? குழந்தைகளை ரசியுங்கள் என்று சொல்வது போலப் பல காட்சிகள் திரைப்படத்தில். குறிப்பாகச் சக வகுப்புத் தோழிக்குக் காதல் கடிதம் எழுதுவதும் அதில் yes or no விற்குக் கட்டம் கட்டி  டிக் அடிக்கச் சொல்வதும், தான் அடித்த  மாணவன்  தலைமையாசிரியரிடம் புகார் அளிக்கும் அதிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்யும் சேட்டையும் அதனைத் தொடர்ந்து பழிப்பதும், தாத்தாவிடம் சண்டைப் போடுவது போன்ற காட்சிகள் சிரிப்பின் உச்சம். குறிப்பாகக் குரங்குப் பேனாவின் கடந்த காலக் கதை அட்ராசிட்டிக் காமெடி வகை. என்னைப் பொருத்த வரை படத்தில் வரும்  குரங்குப் பேனாவாக ஒவ்வொரு பெற்றோர்களும் இருந்திட வேண்டும் என்பதே எனது  ஆசை.

இவையனைத்தையும் விடக் குழந்தைகளிடம் அதிகம் பேசுங்கள் அன்பாகப் பேசுங்கள் பாராட்டுங்கள், தங்களது கடந்த கால வாழ்வினை நிகழ்காலத்தில் பேசுங்கள் போன்றவற்றை ஆங்காங்கே காட்டிக் கொண்டே செல்கிறது திரைப்படம். மொத்தத்தில் “Philips and the monkey pen” திரைப்படம் குழந்தைகள் கொண்டாடப் பட வேண்டியவர்கள். அவர்களைக் கொண்டாடினால் நமக்குக் கொண்டாட்டம் நிச்சையம் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படத்தில் குழந்தை நாயகனாக நடித்திருக்கும் நட்சத்திரம் சனூப் சந்தோஷ் நடிப்பைத் தாண்டி ரசிக்க வைக்கிறார். அதேபோல் பெற்றோராக வரும் ஜெய்சூர்யா, ரம்யா நம்பீசன் போன்றவர்களும் தலைமையாசிரியரான முகேஷ், கணித ஆசிரியரான விஜய் பாபு என அனைவரும் குழந்தையுடன் இணைந்துத் தாங்களும் குழந்தைகளாகவே மாறித் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.


இவர்கள் அனைவரையும் தாண்டித் திரைப்படத்தின் கதையாசிரியரான சனில் முகமது மற்றும் இயக்குனரான ரோஜின் தாமஸ் இருவரையும் பாராட்டியேயாக வேண்டும். தமிழில் வெளிவந்த பசங்கதிரைப்படம் ஈர்த்திருந்தாலும் இந்தப் படத்தில் கிடைத்த மகிழ்ச்சியுணர்வு எனக்கு அதில் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழிலும் இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்.

6 May 2015

வந்தேறிகள் – பொருளாதாரத் தேடலில் இடம்பெயரும் மக்களின் போராட்ட வாழ்வு

உலகினில் நாடோடியாகத் திரிந்த மனிதன் நதிக்கரை நாகரீகங்கள் வளர்ச்சியடைந்து நிலையான இருப்பிடமும் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சற்றே வலிமையான ஒற்றை மனிதனிடமிருந்து அந்த முதல் குரல் ஒலித்தது. இவை என்னுடையது, தனக்கு மட்டுமே சொந்தம்என்ற குரல்தான் அது. அந்நாள் அவனுடன் பகிர்ந்துண்டக் கூட்டத்தினருக்கு அவனது குரல் சில சிந்தனை ஏற்பட அவனுகென்று அவனைப்போலவே ஒரு கூட்டமும் உருவாகிறது. சற்றே வலிமை மிகுந்த அக்கூட்டத்தால் நிலப்பிரிவினை, தொழிற்பிரிவினை எனப் பொருளாதார விலங்காக மாறிய மனிதர்களால் வர்கங்கள்   பிரிக்கப்பட்டு வலிமையுடையவர்கள் என்று நம்பப்பட்ட கூட்டத்தால் மற்றவர்கள்   அடிமைப் படுத்தப்பட்டு ஆளப்படுகிறார்கள்.

அவ்வாறு ஆளப்பட்டவர்களிலிருந்து சில சிந்தனை மனிதர்களும், அடுத்தக்கட்ட வலிமையானவர்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுப்பட்டுத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள மீண்டும் நாடோடி வாழ்வினை ஏற்படுத்திக் கொண்டு அடுத்த இடத்தைத் தேடி நாடோடிகளாகச் சென்று அவர்களுக்கெனத் தனி இருப்பிடம் மற்றும் தேவைகள் என அனைத்தையும் செயல்படுத்த துவங்கியவுடன் மீண்டும் அதே குரல் வெளிவந்த பிறகு அங்கு நிலவியப் பொதுமையானது தனிமையானதாக மாறியது.

அதன் பின் மீண்டும் ஒரு தனிப்பட்ட நகர்வு நாடோடி வாழ்க்கையைத் துவங்கியவர்களிடமும் மீண்டும் தனியுடமைச் சிந்தனைத் தொற்றிக் கொண்டு உலகம் முழுவதும் தனியுடமை என்ற கோட்பாட்டுக்குள் சிக்கியிருந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அதிகரிக்க ஆரம்பித்துத் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தனித் தனியான நகர்வும் அதற்குப் பிறகான நிலையான இருப்பிட வாழ்வு என்ற நிலை வந்த பிறகு அவனிடமிருந்து நாடோடிஎன்ற சொல் நீக்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் அதனைச் சார்ந்த தேவைகள் அதிகரித்துச் சுயநல வாழ்வியல் முறை வந்த பிறகு, தங்களது பொருளாதாரத் தேவை மற்றும் பிற தேவைகளுக்கான போர்கள், பிழைப்புகள் என மீண்டும் ஒரு நகர்வுகளுக்கு ஆளான மனிதர்களை வந்தேறிஎன்று அரசியலுக்கான சொல்லால் அழைத்தனர் நாடோடியாக வந்தவர்கள்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்கப்பட வேண்டியது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கூடத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஊர் சுற்றும் மானிடர்களை நாடோடி என்றுதான் அழைத்தும் வருகிறோம் வந்தேறிகள் என்றில்லை. ஆனால் நாடோடிகளை விட வந்தேறிகளாக வாழும் மானிடர்களின் வாழ்வுதான் மிகத் துயரமனது. அத்துயர்மிகு வாழ்வினில் ஏற்படும் சில மகிழ்வானத் தருணங்கள் மற்றும் போராட்டங்கள் அதனால் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள் என அனைத்தையும் நம்மோடு பேசியிருக்கும் நாவல்தான் பாரதிநாதனின் வந்தேறிகள்”.

தற்காலத்தில் பிழைபிற்காக உறவுகள், உணர்வுகள் என அனைத்தையும் விடுத்து வெளிநாடு மற்றும் வெளியூர் என்று சென்று வாழும் மானிடர்களில் அவரவர் வர்க்கங்களுக்கு ஏற்றார் போல் ஏதோவொரு அமைப்பினை ஏற்படுத்தித் தங்களுக்கென ஒரு பொழுதுப் போக்காக மட்டும் சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருகிறார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் கூட நாடு, மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை விட வர்க்க வேறுபாடுகளை அதிகமாக ஏற்படுத்திக் கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒரே நாடு, ஒரே ஊராக இருந்தாலும் வர்க்க வேறுபாட்டால் பிரிந்துச் செயல்பட்டும் நிலையினை எளிதில் காண முடியும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் வாயிலாக. வந்தேறிகள் மற்றும் சென்றேறிகளாக வாழும் மக்களில் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்கள் வர்க்கங்களில் கடைநிலையிலிருக்கும் தொழிலாளர்கள் மட்டுமே. அந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் அவர்களின் வாழ்வினை நெறிப்படுத்திச் சீர் செய்வதற்காகச் சில இயக்கங்கள் துணைக் கொண்டு அவற்றைப் போராடி முறியடிக்கும் மக்களின் வாழ்க்கை முறையைத் தன்னுடைய தறியுடன்நாவலின் நீட்சியாக இந்த நாவலைப் படைத்துள்ளார் பாரதிநாதன்.

முந்தைய நாவலின் நீட்சி என்று சொல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருப்பது நாவலில் வரும் இயக்கம் மற்றும் அந்தச் செயல்பாடுகள், கதாநாயகன், நண்பர்கள், போராட்டங்கள் மற்றும் போராட்ட முறைகள், காவல்துறையின் அராஜகங்கள், மாணவர்கள் எழுச்சி மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கெனத் தனியிடம், குறிப்பாகத் தங்களின் வாழ்வியல் உரிமைக்களுக்கான போராட்டங்கள் என அனைத்தும் இந்த நாவலிலும் உண்டு. இருபினும் இந்த நாவலைத் தறியுடனிலிருந்து பிரித்துக் காண்பிக்கும் சில பாகங்களில் முக்கியமானதாகத் திகழ்வது போராட்டங்களுக்கு இடையில் விளையும் காதல் மற்றும் அதன் விவரிப்புகள். பசி, குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகப் பாலியல் தொழில் புரியும் பெண்களின் நிலையினை விளக்கும் பகுதிகள்தான்.

பெரும்பாலான ஆண்களின் உணர்ச்சி இச்சைக்காகவே உருவாக்கப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட தொழிலான பாலியல் தொழிலில் இருக்கும் கடைநிலை வர்க்கப் பெண்களையும், ஊரிலிருந்து விலக்கப்பட்ட அவர்கள் வாழும் சாலைஎனப்படும் வாழ்விடம் மற்றும் வாழ்க்கை முறைகளையும் விவரிக்கின்ற இடங்கள் சற்றுக் கனமானதாகவே இருக்கிறது. அதிலும் தொழில் நியதியாக நாளின் முதல் வாடிக்கையாளரிடம் தனது புடவையின் தலைப் பகுதியை கையிலேந்தி பணம் பெற்று அன்றைய தினக் கணக்கைத் துவங்குமிடமும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் உரையாடல்களும், கதாநாயகியான பாலியல் தொழிலாளியான சரிதாவிற்கும் கதாநாயகர்களில் ஒருவரான சந்துருவிற்குமிடையில் ஏற்படும் காதலும் கண்டிப்பாகப் பேசப்படவேண்டிய ஒன்றுதான்.  அதேபோல் சாலையில் உள்ள மற்ற பெண்களும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்களே.

தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேவைக்காகப் பாலியல் தொழிலில் ஈடுபடும் சில நவநாகரீகப் பள்ளி மற்றும் கல்லூரி யுவதிகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்திலும் பசிக்காகவும், உயிராவது வாழலாமே என்கிற உயிர் ஆசைக்காகவும் தங்களது குடிகரமான வாழ்க்கைக்கு மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடித்தியிருக்கும் ஆண்களால் அத்தொழிலுக்கு வந்திருக்கும் பெண்களின் வாழ்விடமாக இருக்கும் சாலைக் குடிசைகளின் கண்ணீர்க் கதைகளும் தறியுடன்நாவலில் இருந்து வந்தேறிகள்நாவலைப் பிரிகின்ற ஒன்று. ஆனால் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்நாவலைப் பிழைப்பிற்காக வெளியே செல்லும் அனைத்து மக்களின் குரலாகவே எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் மற்றொரு கதாநாயகனான மாதேசு மற்றும் பொன்னியின் காதலும், தங்கள் இல்லத் திருமணம் போல் ஊரார் இணைந்து நடத்தும் அவர்களது சீர்திருத்த திருமண நிகழ்வும், அந்தத் திருமண மேடையில் நிகழும் சிறு மாற்றங்கள் மற்றும் அதனையொட்டிய மகிழ்வானத் தருணங்கள் போன்றவை என்னதான் பொருளாதார விலங்காகவே நாம் இருந்தாலும் இதுபோன்ற மகிழ்வுத் தருணங்கள் தான் நம்மை அவ்வபோது மனிதர்களாகச் செயல்பட வைக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

மற்றப்படிச் சொந்த ஊர் விசைத்தறித் தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சனைப் போன்றவற்றைப் பேசியிருக்கும் தறியுடன்நாவலும் ஊர் விட்டு ஊர் வந்து வெளியூர் விசைத்தறித் தொழிலாளர்களின் பிரச்னையைப் பேசியிருக்கும் வந்தேறிகள்நாவலும் பாகம் ஒன்று மற்றும் இரண்டாகதான் தெரிகிறது. தறியுடனில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இயக்கங்களில் ஒன்றான நக்சல்பாரி இயக்கத்தை வெளிப்படையாகச் சில இடங்களில் தெரிவித்திருப்பார் ஆசிரியர். வந்தேறிகளில் இயக்கம் பற்றிய உரையாடல்கள் வருமிடங்களிலெல்லாம் தலைமறைவு இயக்கம் என்றே வருகிறது. அதற்குச் சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசின் அடக்குமுறை மற்றும் எழுத்தாளர்கள் மீது நடைபெறும் நேரடித் தாக்குதல்கள் காரணமாக இருக்குமோ? என்ற கேள்வி எழுகிறது. பாரதிநாதனும் போராட்டகாரர் என்பதனால் அவருக்கு அந்த ஐயம் இருக்க வாய்பில்லை என்றே நம்பலாம்.

மேலும் இந்நாவலை வாசிக்கும் போது தங்களது வறுமைக்காக நம்மூரில் வந்து வேலைகள், தொழில்கள் பார்க்கும் வடமாநில மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்த மக்களிடம், குறிப்பாக வர்கத்தின் கடைநிலையில் இருப்பவர்களையும் நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேள்விகளும் எழுகிறது. இந்நாவலில் வருவது போல் அவர்கள் சங்கம், போராட்டாம் என்று ஆரம்பித்தால் எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுப்போம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் பொருளாதாரத் தேடலுக்கான பொருளாதார விலங்காக இடம்பெயரும் மனிதர்களின் போராட்ட வாழ்வு இந்த வந்தேறிகள்”.


# இனியன்.