2 Mar 2014

சர்கஸ்

நீண்ட நெடிய வாழ்வியல் பயணத்தில் ஆங்காங்கே பார்க்கும் காட்சிகளும்,நடந்தேறும் நிகழ்வுகளும் நமது பயணத்தை சற்றே பின்னோக்கி அழைத்துசென்று ஆணியடித்து நினைவில் தொங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளை பிடுங்கி தற்காலத்தோடு ஒப்பிட்ட வைத்து தற்காலத்து முரண்களாகவும் சிந்தனைகளாகவும் நினைவில்  மற்றுமொரு ஆணியை அடித்து விட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வபோது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.அவ்வாறு என் நினைவை கிளறிய நிகழ்வு சமீபத்தில் நான் பார்த்த "ஜம்போ சர்க்கஸ்".

சிறு வயத்தில் ஒவ்வொரு முறையும் பார்க்க பார்க்க திகட்டாமல் ஆச்சரியம் கலந்த,மகிழ்ச்சியில் குதூகலித்து வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பார்த்து ரசித்த நிகழ்வுகளில் ஒன்றுதான் சர்க்கஸ்,பெரும்பாலும் பள்ளி ஆண்டு விடுமுறை நாட்களிலோ அல்லது சில்லிய குளிர் சிலிர்க்க வைக்கும் அரை தேர்வு  ஒட்டிய மாதங்களிலோ தான் சர்க்கஸ் அமைப்பினர் முகாமிட்டு,எங்கு பார்த்தாலும் சர்க்கஸ் பற்றிய விளம்பர அட்டைகள்,சுவரொட்டிகள் மற்றும் மூன்று சக்கர வணிக ஊர்திகள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல் "பல ஊர்களிலும்,பல நாடுகளிலும் பல நிகழ்ச்சிகளையும் பல சாகசங்களையும் புரிந்து  வெற்றிகரமாக  நடத்திவரும் உங்கள் அபிமான ஜம்போ(ராயல்,ஜெமினி இந்த மூன்று நிறுவனம் மட்டுமே அடிக்கடி வருவார்கள்) சர்க்கஸ் தற்போது உங்கள் மாநகரில் உங்களையும் குழந்தைகளையும் மகிழ்விக்க வந்துள்ளதுனர்." என்று ஒரே நபர் ஒரே குரலில்  அனைத்து காலங்களிலும் அனைத்து சர்க்கஸ் நிறுவனங்களுக்காகவும்     விளம்பரபடுத்திகொண்டு மாநகராட்சியின் அனைத்து பகுதிக்கும் செல்லும் வாகனத்தின் பின்னோடி விளம்பர சீட்டு வாங்கி அதை வீட்டின் கதவுகளில் ஒட்டி வைத்து அம்மாவிடம் அடி வாங்கியும்,பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு தொலைவில் கேட்கும் விளம்பர ஒலியை கேட்டுக்கொண்டு வகுப்பை கோட்டை விட்டு ஆசிரியரிடம் அடிவாங்கியும்,எப்படா அப்பா அழைத்து செல்வார் என்று ஏங்கிக்கொண்டே தேர்வுகள் எழுதி முடித்து விடுமுறை ஆரம்பித்தவுடன் ஆரம்பித்து விடுவோம் அப்பா சர்க்கஸ் என்று.

நான் வசித்தது அரசு ஊழியர் குடியிருப்பு என்பதால் எங்காவது போவதாக இருந்தால் அனைத்து சிறுவர்களும் அனைத்து குடும்பளிலும் ஒருவாறு சம்மதம் வாங்கி அனைவருக்கும்  ஒத்து வரும் நேரங்களில் அனைவரும் படைசூழ கிளம்பி  சிறுவர்களும் பெரியவர்களுமாக சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை செல்வோம், செல்லும்போதே வீட்டிலிருந்தே தீனிகளும் எடுத்துக்கொண்டு அங்கு சர்க்கஸ் தவிர வேறு எதுவும் கிடையாது என்று முன்கூட்டிய தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் சென்று 5,10,20,30 என பிரித்து வைக்கப்பட்டிருக்கும் நுழைவுசீட்டு பகுதியில்,அனைத்து பெரியவர்களும் சேர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுப்பது போல் முடிவெடுத்து 10 ரூபாய் நுழைவுச்சீட்டு பெற்று செல்வோம் என்று தலைகளை எண்ணி நுழைவுச்சீட்டு எடுத்து வருவார்கள்.

மகிழ்ச்சின் உச்சத்தில் கூடாரத்தினுள் நுழையும் போதே ஏய் அங்க பாரு யானை,இங்க பாரு நீர்முழ்கியானை,ஏய் அங்க பாரு குதிரை,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி எல்லாம் நிக்குது,இந்த சிங்கம்,புலி கரடியெல்லாம் எங்க நிக்கும் என்று கேட்டுகொண்டே உள் சென்று அரங்கு நிறைந்த கூடாரத்தில் அனைவரும் சேர்ந்தாற்ப்போல்  இருக்கைய் பிடித்து ஒரு வழியாய் அமர்வோம்.

பொதுவாக அனைத்து சர்க்கஸ் நிறுவனத்திடமும் ஒரே கொள்கை முந்தைய காட்சியில் எது கடைசி நிகழ்வாக இருந்ததோ,அதுவே அடுத்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக இருக்கும்,இதில் நான் பார்த்த வரை எனக்கு அமைந்த முதல் நிகழ்வுகள் அனைத்தும் சர்க்கஸ் கூடாரத்தின் கூரை பகுதியில் ஆண்களும் பெண்களுமாக அந்தரத்தில் தலைகீழாக கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் 'பார் விளையாட்டு' என்று சொல்லப்படும் நிகழ்வுதான் நடைபெறும்,பாதுகாப்பு வலைகள் இருந்தாலும் அதை வாய் பிளந்த படி ஒருவித பதற்றத்துடன் பார்த்துகொண்டு அமர்ந்திருப்போம்,ஒரு முறை சர்க்கஸ் முடிந்து வீட்டிருக்கு சென்று தொலைக்காட்சியை திறந்தவுடன் 'பறக்கும் பாவை' திரைபடத்தில் மக்கள் திலகம் அவர்கள் வில்லன் அசோகனிடம்  பாதுகாப்பு வலையின்றி 'பார்' விளையாடுவதாக சவால் விட்டு கொண்டிருந்தார்,அதை பார்த்த கணம் சிரித்தமைக்காக வீட்டில் திட்டுதான் விழுந்தது என்னா வீட்டுல உள்ளவங்க பழைய திரைப்பட விரும்பிகள்.
அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக பல நிகழ்வுகளும் சாகசங்களும் நடைபெறும்,ஆண்களும் பெண்களுமாக நம்மை மகிழ்விக்க,அவர்கள் செய்யும் மரண சாகசங்களை வியந்து பார்த்த வாரே வாய் பிழந்து அமர்ந்திருக்கும் வேளையில்,அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டம் செய்யும் சேட்டைகளை என்றுமே மறக்க இயலாத சிரிப்பலைகள்.

சர்க்கஸில் எப்போதும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் நிகழ்விற்கு அடித்தளமிடும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டு,அனைத்து விலங்குகளும் சிறைப்படுத்தப்பட்டு சிங்கம்,புலி,ஒட்டகம்,ஒட்டகசிவிங்கி,கரடி,நீர்யானை, என நாம் பார்த்திராத அறிய வகை விலங்குகளை வைத்து ஆட்டி வைக்கப்பட்டு எங்களை ஏன்டா இப்படி கொடுமை படுத்திறீங்க என்ற பாவனையில் பார்த்து செல்லும்,இருப்பினும் அந்த உணர்வுகளை புரிந்துனராதா நாம் கைகொட்டி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவயது ரசனை மிக்க தருணங்கள் மிக்க அருமையானதொரு நீங்காத நினைவுகள்.

நமது அரசுகளின் சீரிய முடிவால் அந்த மிருகங்கள் அனைத்தும் காப்பாற்றப்பட்டாலும் அவைகளை வைத்து பிழைப்பு நடைத்திகொண்டு வந்த சர்க்கஸ் நிறுவனங்கள் இன்று இல்லை,ஒளிந்து போன நிறுவனங்களில் இருந்து தப்பித்த ஒன்றாகத்தான் நான் சமீபத்தில் பார்த்த "ஜம்போ சர்க்கஸ்",நுழைவுக்கட்டணம் 70,150,200,300,400 என்ற வகைப்பாட்டுடன் முகப்புகள் வரவேற்க,உள்ளே நுழைந்தயும் போதே விலை பட்டியலை பார்த்து பிரமித்து போய்கொண்டிருந்த நிலையில் சிறுவயதில் நான் பார்த்து வியந்த அந்த விலங்குகள் இல்லையென்றாலும் யானை,ஒட்டகம் மற்றும் குதிரை போன்ற மனிதர்களிடம் எளிதில் பழக கூடிய விலங்குகளை பார்க்க முடிந்தது,தற்கால குழந்தைகளுக்கு அவற்றை பாத்ததே மனமகிழ்வுதான் என்று அவற்றை பார்த்து குதூகலித்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பார்த்தவுடன் புரிந்துகொண்டேன்.உள்ளே செல்லும் பொது நான் கவணித்த முதல் விசையம் அரங்குகள் கண்டிப்பாக நிறம்பாது என்பதுதான்.


உள்ளே சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 200ரூபாய் இருக்கையில் அமர்ந்த கணத்தில் கண்டுகொண்டேன் தற்போதும் முதல் நிகழ்வாக “பார் விளையாட்டு” என்று கட்டியிருந்த வலைகளை கண்டு யூகித்துகொண்தற்கிணங்க முதல் நிகழ்வு அதுவாகவே இருந்தது,நிகழ்வு துவங்கியவுடன் என்னால் ஒன்றை கவனிக்க முடிந்தது,அந்த விளையாட்டில் பெண்கள் ஒருவர் கூட இல்லை,அதனால்தான் என்னமோ அந்த நிகழ்வை சரியாகா கவனிக்க இயலவில்லை,ஆனால் அது மட்டும் காரணமா என்று யோசித்தால், இல்லை என்ற பதில்தான் என்னுள்ளே.
அதன் பின் வந்த ஒவ்வொரு நிகழ்வுகளுமே மனமோப்பாத நிலையிலையே நிகழ்வுகளை கண்டுகொண்டிருந்தேன்,ஏனென்றால் மாறிய வாழ்வியல் முறையில் மற்றவர்களை மகிழ்விப்பதற்காகவும்,தங்களது பொருளாதாரத் தேவைகளுக்காகவும் தனது இருப்பிடங்களை விடுத்து ஒவ்வொரு ஊராக சென்று உடல்களை வருத்தி சாகச என்று நிகழ்வுகள் நடத்தினாலும் சொற்ப வருமானமே பெற்றுகொண்டிருக்கும் வடகிழக்கு மாகாணங்களிலிருந்து வந்திருந்த இந்த சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வியல் நிலை மற்றும் சூழல்கள் பற்றிய எண்ணமே என்னுள் ஓடிகொண்டிருந்தது,சர்க்கஸ் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறிது தூரம் அளவில் சிறிதாக சுருங்கிப்போன கூடார அமைப்பையும், அந்தனை சுற்றியுள்ள சிறிய சிறிய தகர தடுப்புகளிட்டு,ஒரு சிறிய அறை போன்ற தடுப்பில் நான்கு அல்லது ஐந்து படுக்கைகள் அவர்களுக்கான சமையல் அறை என்பது விலங்குகளின் கழிவுகள் கொட்டி வைக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தது மற்றும் மிகவும் குறைவான அடிப்படை வசதிகள் கொண்ட அவர்களின் வாழ்க்கை கொட்டகைகளையும் பார்த்ததன் விளைவே எந்த ஒரு நிகழ்விலும் மனம் ஒருகினைய மறுத்த முதல் காரணமாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறன்.
முதல் நிகழ்விலேயே முக மலர்ச்சி இல்லாத கலைங்ஞர்களின் முகமும் நிகழ்வு நடந்து முடிந்தவுடன் கூட்டமில்லாத அரங்கை பார்த்து அவர்களின் சம்பிரதாய விடைபெருதல்களும்,அவர்களின் கண்களில் கண்ட ஒருவித சோக நிலைதான்.அநேகமாக அந்த சோக நிலைக்கு காரணம் அவர்களின் அன்றைய பொருளாதாரம் கூட காரணாமாக இருக்கலாம்,ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் அன்றன்டைய மொத்த பார்வையாளர்களின் எண்ணக்கையை பொறுத்தே அவர்களுக்கு சம்பளம் என்று சர்க்கஸ் பற்றி ஒரு நண்பர் தெரிவித்தது நினைவு வந்தது எனக்கு,நான் சென்ற காட்சியில் ஒரு 120 பார்வையாளர்கள் மட்டுமே இருந்தோம் என்பது அவர்களுக்கு மட்டுமில்லை நான்னும் கூட வருத்தில் தான் இருந்தேன்.அந்த வருத்தம் கோமாளிகள் செய்யும் கோமாளித்தனங்களிலும் எதிரோலித்ததுதான் மிகப் பெரிய வேதனை.
சர்க்கஸ் நிகழ்வின் கடைசி நிகழ்வாக சர்கஸ் உலகிற்காக பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் தங்கள் பங்கிற்கு சிறிது நேரம் வந்து பந்துகள் விளையாடிவிட்டு சென்றன,அவைகளும் கூட அழுகை உற்ச்சாகமின்றி இருந்ததாகவே தோன்றியது.
அரங்குகள் நிறைந்து நிற்பதற்கு இடமின்றி கூட்டமிருந்த காலத்தை எண்ணி பார்த்தும்,அப்போதைய நிகழ்வுகளில் இருந்த மகிழ்ச்சியும்,நிறைவும் இன்று நடைபெறும் சர்க்கஸ் நிகழ்வுகளில் சிறிது கூட இல்லை,மக்களிடம் சென்றடைவதற்கான விளம்பரங்களும் இல்லை,வித்தியாசமாக ஏதேனும் செய்தால் அதற்கான வரவேற்புமில்லை,என்ற எண்ணங்களுடனும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் போட்டியிட மிகவும் சிரமப்பட்டாலும் விடாமுயற்சியுடனும் நம்பிக்கைகளுடனும் போராடிக்கொண்டிருக்கும் சர்கஸ் நிறுவங்களையும்,வருமானம் சொற்பமாக இருந்தாலும் தங்களது மிகப்பெரிய பங்களிப்பான உடல் உழைப்பை கொடுத்துகொண்டிருக்கும் சர்கஸ் கலைஞர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
மீண்டும் இது போல் சர்கஸ் நிகழ்வுகள் வந்தால் அனைவரும் கண்டிப்பாக சென்று சென்று பார்க்க வேண்டும்,பார்ப்பது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்வியல் முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்,இல்லையென்றால் நமது பின்சந்ததியினர் சர்கஸ் என்பதை வரலாற்று புத்தகங்களிலும் கதைகளிலும்தான் தெரிந்துகொள்வர்.கிட்ட தட்ட தற்பொழுதே சர்கஸ் என்பது அவ்வாறுதான் உள்ளது,இந்த நிலை மாற சர்கஸ் நிறுவனங்களும் புதுமைகள் எதாவது செய்ய வேண்டும்,நாமும் அவற்றை வரவேற்று அவர்களுக்கு மீண்டும் அங்கிகாரம் அழிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆவலாக உள்ளது.

 #இனியன்

No comments:

Post a Comment